மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் இலக்கை துரத்தி ரன்களை அடிப்பது என்பது மிகப்பெரிய கலை. ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சேசிங்கில் சிறப்பாக செயல்படுவது என்பது மிகவும் முக்கியம்.
தோனி, ஹஸி, மைக்கேல் பவன், விராட் கோலி போன்ற பல கிரிக்கெட் வீரர்கள் சேசிங்கில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் உலகின் சிறந்த சேஸர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே சேசிங்கில் சிறந்து விளையாட கூடிய வீரர் என்றால் அது விராட் கோலி தான். அவரை தவிர வேறொரு சிறந்த சேஸர் வெள்ளை நிற கிரிக்கெட்டில் இல்லை என்பது தான் என்னுடைய கருத்து என்று ஆண்டர்சன் கூறியிருக்கிறார்.
விராட் கோலிக்கும் அண்டர்சனுக்கும் இடையே களத்தில் பல சிறப்பான போட்டிகள் நடைபெற்றிருக்கிறது.
36 இன்னிங்ஸில் ஆண்டர்சனை விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்கொண்டு அவருக்கு எதிராக 305 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஏழு முறை ஆட்டம் இழந்திருக்கிறார். இதைப் போன்று விராட் கோலி, ஆண்டர்சனை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறு முறை எதிர்கொண்டு 26 ரன்கள் சேர்த்து இருக்கிறார். மூன்று முறை ஆட்டம் இழந்திருக்கிறார்.
இந்த சூழலில் ஆண்டர்சன், விராட் கோலி தான் சிறந்த சேஸர் என்று சொன்னதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் விராட் கோலி அடித்துள்ள 50 சர்வதேச ஒரு நாள் சதத்தில் 27 சதம் சேஸிங்கில் வந்ததாகும். இதில் 23 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சேசிங்கில் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் மட்டும் சராசரியாக 67 ரன்கள் அடித்திருக்கிறார். இதனால்தான் ஆண்டர்சன் விராட் கோலியின் பெயரை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.