லண்டன்: கோல்ப் விளையாட்டின்போது பந்து முகத்தில் பட்டு, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சனின் பல் உடைந்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணியை 162 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து. பென் ஸ்டோக்ஸ் 4, ஸ்டார்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, பிராட் மற்றும் ஆன்டர்சன், கோல்ப் விளையாடியுள்ளனர். அப்போது ஆன்டர்சன் விளையாடுவதை வீடியோ எடுத்துள்ளார் பிராட்.
ஆன்டர்சன் அடித்தப் பந்து, அருகில் உள்ள மரத்தில் பட்டு தெறித்து, ஆன்டர்சனின் முகத்தில் பட்டுள்ளது. இதில், ஆன்டர்சனின் பல் உடைந்துள்ளது.
இந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9ம் தேதி நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆன்டர்சன் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.