பர்மிங்ஹாம்: ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர்களான ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் பிரம்மாண்ட சாதனையை படைக்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சரித்திர புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என்று சமனில் முடிந்திருந்தாலும், ஆஸ்திரேலிய அணியின் கைகளே ஓங்கி இருந்தது. பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இங்கிலாந்து அணியின் காப்பானாக இருந்தார்.

இதனால் இம்முறை இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியாவும், கடந்த முறை வாங்கிய அடிக்கு பழிதீர்க்க இங்கிலாந்து அணியின் முனைப்புடன் உள்ளன. களமிறங்குவதற்கு முன்பாகவே இரு அணி வீரர்களும் களத்தில் வெளியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஆஸி. வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு சவாலாக இருக்கிறார்கள்.
ஆனால் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலிய அணிக்கு எமனாக இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சம்மருக்கு பின்பும் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் ஆண்டர்சன், மீண்டும் ஆஷஸ் தொடரில் கர்ஜிக்க காத்திருக்கிறார். 180வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்பதோடு, அவர் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.
இதுவரை 685 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆண்டர்சன், ஆஷஸ் தொடர் முடிவதற்கு 15 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். அதேபோல் இங்கிலாந்து அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரரான ஸ்டூவர்ட் பிராட் 582 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதனால் இவர் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்க 18 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. இதனால் இவர்கள் இருவருமே ஆஸி. அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.