
இந்திய ஜெர்ஸி
இங்கிலாந்தில் பிராங்க் செயல்களில் ஈடுபடும் ஜார்வோ, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, பீல்டிங் செய்வதுபோல உள்ளே வந்தார். அதனை கண்ட அம்பயர்கள் மைதான ஊழியர்கள் உதவியுடன் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். அவர் பக்காவான ஒரு இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்திருந்தார். அதில், லோகோ, ஸ்பான்சர்ஸ் பெயர் என்று அனைத்தும் மிகச் சரியாக இருந்தது. ஜெர்ஸிக்கு பின்னால் ஒரு எண்ணும், அவரது பெயரும் (jarvo) இருந்தது. ஒரு நிமிடத்தில் அவரும் ஒரு வீரர் தான் என ரசிகர்கள் நம்பிவிட்டனர்.

மீண்டும் சேட்டை
அவர் லார்ட்ஸை போட்டியைத் தொடர்ந்து, ஹெட்டிங்லே மைதானத்திலும் தனது சேட்டையை செய்தார். இந்தமுறை பேட்ஸ்மேன் கோலியாக உருமாறி அவர் பேட்டிங் செய்ய களத்திற்குள் நுழைந்து இந்திய அணிக்கு பீதியை ஏற்படுத்தினார். ரோஹித் 59 ரன்களில் அவுட்டாகி சென்ற போது, கேப்டன் கோலி களமிறங்க தயாராகிக் கொண்டிருந்தார். அதே கேப்பில் மைதானத்திற்குள் பேட், கிளவுஸ், ஹெல்மெட் எல்லாம் அணிந்துகொண்டு ஒரு பேட்ஸ்மேன் போல நுழைந்துவிட்டார் ஜார்வோ. இதைப் பார்த்து நடுவர்கள் அதிர்ச்சியாக பின்னர் பாதுகாவலர்கள் வந்து அவரை வெளியே இழுத்துகொண்டு போனார்கள். ஹெல்மெட் அணிந்து, அதற்குள் ஒரு மாஸ்க்கும் அணிந்து வந்து ரகளை செய்துவிட்டார்.

வாழ்நாள் தடை
இங்கிலாந்து அணி விளையாடும் போட்டிகளுக்குள் வந்து பிராங்க் செய்வதை இவர் வாடிக்கையாக செய்து வருகிறார். ஆட்டத்தின் போது பாதிப்பை ஏற்படுத்தும் இவரை போன்ற நபர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். ஹெட்டிங்லே மைதானத்திற்குள் இனி வாழ்நாள் முழுவதும் நுழைவதற்கு ஜார்வோவுக்கு தடை விதித்தது. ஆனால் இந்திய அணி சார்பில் அவர் மீது எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்தான், தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை எடுத்தது.
வீரர்கள் அதிர்ச்சி
இப்படியொரு சூழலில், "மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?" என்பது போல், இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நுழைந்து பந்துவீச முயன்றுள்ளார் ஜார்வோ. இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பந்துவீசுவது போல் ஓடி வந்த ஜார்வோ பேர்ஸ்டோ மீது வேகமாக மோதிவிட அவர் பதறிவிட்டார். அதன் பிறகு வழக்கம் போல், பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். முன்பு, ரசிக்கப்பட்ட அவரது வரம்பு மீறல்கள் இப்போது எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும், ஜார்வோவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











