லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியிலிருந்து தான் பாதியிலேயே விலகியதற்கான அதிர்ச்சிகரமான பின்னணி காரணங்களை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி தற்போது உடைத்துப் பேசியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தியதே தனது ராஜினாமாவுக்கு முக்கியக் காரணம் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜேசன் கில்லஸ்பி கடந்த ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். ஆனால், வெறும் 8 மாதங்களிலேயே அவர் அந்தப் பதவியைத் துறந்தார். இது குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஜேசன் கில்லஸ்பி கூறியிருப்பதாவது, "நான் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, வாரியம் எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமலேயே, அணியின் மூத்த உதவிப் பயிற்சியாளர் டிம் நீல்சனை பணிநீக்கம் செய்தது. ஒரு தலைமைப் பயிற்சியாளரான என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இது மட்டுமல்லாமல், அங்கு நடந்த பல்வேறு சம்பவங்கள் என்னை மிகவும் அவமானப்படுத்துவது போலவே இருந்தன. அத்தகையச் சூழலில் என்னால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை" என்றும் கில்லஸ்பி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கில்லஸ்பியின் பதவிக்காலம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. இருப்பினும், பின்னர் சுதாரித்துக்கொண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 எனக் கைப்பற்றி சாதனை படைத்தது. நட்சத்திர வீரர் பாபர் அசாமை அணியிலிருந்து நீக்கியது போன்ற கடினமான முடிவுகள் அவரது காலத்தில் எடுக்கப்பட்டன.
ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி மீதும் கில்லஸ்பி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். முன்னதாக கேரி கிர்ஸ்டன் ஏற்பாடு செய்திருந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்திற்கு, தானும் கிர்ஸ்டனும் வெளிநாடுகளிலிருந்து விமானம் பிடித்து நேரில் வந்த நிலையில், வாரியத் தலைவர் நக்வி சாதாரணமாக 'ஜூம்' காலில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அவமரியாதையையும் அளித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
திறமையான வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் அணியில் நீண்ட காலம் நீடிக்க முடிவதில்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே உள்ளது. தற்போது கில்லஸ்பியின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகச் சீர்கேட்டை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.