ஜேசன் ஹோல்டர் அபாரம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகள், கடந்த 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் துவங்கியதன்மூலம் மீண்டும் உயிர்ப்புக்கு வந்துள்ளது. இந்த தொடரின் ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
2000 ரன்களை அடித்து ஜேசன் சாதனை
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமன் செய்துள்ளன. தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 2000 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
38வது மேற்கிந்திய தீவுகள் வீரர்
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களை அடித்ததன்மூலம் இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை அடித்த 38வது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 369 ரன்களை அடித்துள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 197 ரன்களில் சுருண்டுள்ளது.
3வது வீரர் ஹோல்டர்
முதல் இன்னிங்சில் ஜேசன் ஹோல்டர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துள்ள நிலையில், மற்ற வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர். இதனிடையே, ஆல்-ரவுண்டரான ஜேசன் ஹோல்டர், இந்த தொடரின்மூலம் 100 விக்கெட்டுகளையும் எட்டியுள்ளார். சர் கேரி சோபர்ஸ் மற்றும் கார்ல் ஹுப்பர் ஆகிய வீரர்களுக்கு பிறகு இந்த இரு சாதனைகளையும் எட்டிய 3வது மேற்கிந்திய வீரர் என்ற பெருமையும் ஜேசன் ஹோல்டருக்கு கிடைத்துள்ளது.