எப்படியாவது விளையாடணும்.. மூடிய ஸ்டேடியமா இருந்தாலும் பரவாயில்லை.. துடிக்கும் ஜேசன் ராய்
லண்டன்: காலி ஸ்டேடியத்தில் போட்டி நடத்தினால் கூட பரவாயில்லை. கிரிக்கெட் விளையாடியே ஆக வேண்டும் என்று தவிப்புடன் கூறியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் . கிரிக்கெட் விளையாடாமல் இருக்க முடியவில்லை என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து கோப்பை வென்றது. அதில் முக்கியப் பங்காற்றியவர் ஜேசன் ராயும்தான். தற்போது கொரோனாவைரஸ் காரணமாக போட்டிகள் முடங்கிப் போயுள்ளதால் அப்செட் ஆகியுள்ளார் ஜேசன் ராய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எப்படியாவது கிரிக்கெட் ஆட வேண்டும். காலி மைதானத்தில் நடத்தினால் கூட பரவாயில்லை. நான் தயார்தான். ஏற்கனவே பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் இப்படி காலி மைதானத்தில் ஆடிய அனுபவம் உள்ளது. அது வித்தியாசமான அனுபவம். ஆனால் நிச்சயம் நல்ல அனுபவம்தான்.

அது நூதன அனுபவம்
ரொம்ப நூதனமாக இருந்தது என்பது மறக்க முடியாதது. யாருமே இல்லாத இடத்தில் நாம் மட்டும் ஆடுவது வித்தியாசம்தான். ஆனால் கிரிக்கெட்டோடு இணைந்திருந்தோம். அதுதான் நாம் கவனிக்க வேண்டும். பவுலர் ஓடி வருகிறார். பேட்ஸ்மேன் அடிக்கிறார். பீல்டர்கள் ஓடுகிறார்கள். வேறு சத்தமே கிடையாது, நிச்சயம் வித்தியாசமான அனுபவம் அது என்று கூறியுள்ளார்.

பந்து பறந்தால் நிசப்தம்
அதேபோல கேலரியில் போய் பந்து விழும்போது ரசிகர்களின் ஆரவாரக் கூச்சல் வழக்கமாக காதைப் பிளக்கும். அந்த மாதிரி எந்த சப்தமும் இதில் இல்லை. ஏன் நாம் பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்தால் கூட நிசப்தம்தான் பதிலாக இருந்தது. ரொம்ப நூதனமான அனுபவம். இருந்தாலும் நாம் கிரிக்கெட் விளையாடினோம் என்ற திருப்தி கிடைத்தது. மீண்டும் அதுபோல நடந்தால் நான் ஆடத் தயார்தான் என்றார் ஜேசன் ராய்.

அதிரடி ஆட்டம்
ஜேசன் ராய் அருமையான ஆட்டக்காரர், அதிரடி ஆட்டக்காரர். ஜூலை 1ம் தேதி முதல் கவுன்டி சீசன் தொடங்கும் எனத் தெரிகிறது. அதில் ஆட ஆர்வமாக தயாராகி வருகிறாராம் ஜேசன் ராய். காலி மைதானத்தில் போட்டியை நடத்தினாலும் கூட நான் ஆடத் தயாராக இருக்கிறேன். ஆனால் தயவு செய்து போட்டிகளை ஒத்தி வைத்து விடாதீர்கள். போட்டியில் நாம் பங்கேற்பதோ மகிழ்ச்சிகரமானது என்று கூறியுள்ளார்.

3 டெஸ்ட் தொடர்
இதற்கிடையே இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜூலை 8ம் தேதி தொடங்கலாம் என டெய்லி டெலிகிராப் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தொடர் முன்னதாக ஜூன் 4ம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தள்ளிப் போடப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் பரவல்தான் இதற்குக் காரணம். இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications