மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தற்போது தந்தை ஆகி இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நீண்ட நாள் காயத்திற்கு பிறகு திரும்பிய பும்ரா நேற்று திடீரென்று அணியை விட்டு தாயகம் திரும்பினார்.
முதலில் இதற்கான காரணம் சொல்லப்படாத நிலையில் பிறகு மனைவி சஞ்சனாவின் பிரசவத்திற்காக பும்ரா நாடு திரும்பி இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று பும்ரா வெளியிட்டுள்ள பதிவில் தாம் தந்தையாக இருப்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்களுடைய சிறிய குடும்பம் தற்போது வளர்ந்திருக்கிறது. எங்களுடைய இதயம் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு முழுமையாக மாறி இருக்கிறது. இன்று காலை நாங்கள் எங்களுடைய மகனை இந்த உலக்கிற்கு வரவேற்கிறோம்.
அவனுக்கு அங்காத் ஜஸ்பிரித் பும்ரா என பெயரிட்டு இருக்கிறோம். நாங்கள் தற்போது மகிழ்ச்சியில் நிலவின் மேல் பறக்கிறோம். எங்களுடைய குடும்பத்தின் புதிய அத்தியாயத்தை எதிர்நோக்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பும்ரா தெரிவித்துள்ளார். மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பிய பும்ரா மீண்டும் தற்போது இந்திய அணிக்கு எப்போது திரும்புவார் என எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இன்று இந்திய அணி முக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டத்தில் நேபாளை எதிர்கொள்கிறது. நேபாள் அணி இந்தியாவை விட பலம் குன்றியது என்பதால் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரிய மைனஸ் ஆக ஏதும் இருக்காது. மேலும் இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால்தான், பும்ரா நாடு திரும்பி இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்திய அணி தங்களது அடுத்த போட்டியில் வரும் 10ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதனால் பும்ரா மூன்று நாட்கள் வரை மனைவியுடன் தங்கி நேரத்தை செலவழிக்க உள்ளார். அதன் பிறகு செப்டம்பர் 8 அல்லது 9ஆம் தேதி மீண்டும் இலங்கை வர இருக்கிறார். பத்தாம் தேதி கொழும்புவில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.