குளறுபடிகள்
பந்துவீச்சில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பும்ரா தாமாக தேடிச் செல்லும் ஒருவரை பிசிசிஐ ஏன் பதவியில் நியமிக்கவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் நடந்த குளறுபடிகள் குறித்து தற்போது பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பும்ரா காயம்
பும்ரா காயத்தில் இருப்பதால் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவில்லை. இங்கிலாந்து சென்று மருத்துவ ஆலோசனை பெற்ற பும்ரா, தற்போது இந்தியா திரும்பி உள்ளார்.
மீண்டும் பயிற்சி
மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீண்டும் பயிற்சிகளை தொடங்கி இருக்கிறார் பும்ரா. அவர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டி ஸ்ட்ரென்த் அண்ட் கண்டிஷனிங் சிறப்பு பயிற்சியாளர் உதவியை நாடி உள்ளார்.
தேசிய கிரிக்கெட் அகாடமி வேண்டாம்
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை காயமடைந்த வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் புத்துணர்வு பெற அழைக்கப்படுவார்கள். ஆனால், பல வீரர்கள் அங்கே செல்ல மறுத்து வருகிறார்கள். அங்கே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்ற கருத்து நிலவுவதே அதற்கு காரணம்.
ரஜினிகாந்த் உதவியை நாடினார்
இந்த நிலையில், ரஜினிகாந்த் சிவஞானம் என்ற பயிற்சியாளரை அணுகி உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் கிரிக்கெட் ஆடும் அளவுக்கான தகுதி பெற முயற்சித்து வருகிறார் பும்ரா.
வாய்ப்பு அளிக்காத பிசிசிஐ
அதே ரஜினிகாந்த் சிவஞானம் சில நாட்கள் முன்பு இந்திய அணிக்கான ஸ்ட்ரென்த் அன்ட் கண்டிஷனிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அவரை ஏற்றுக் கொள்ளாத பிசிசிஐ குழு, நிக் வெப் என்ற வெளிநாட்டை சேர்ந்தவரை நியமனம் செய்தது.
காரணம் யார்?
ரஜினிகாந்த் சிவஞானம் நிராகரிக்கப்பட முக்கிய காரணம், அவரை தேர்வு செய்த குழுவில் இடம் பெற்ற ஜிம் ட்ரெய்னர் ஒருவர் தான் என கூறப்படுகிறது. மிகவும் அனுபவம் குறைந்த அந்த ட்ரெய்னர் எப்படி தேர்வுக் குழுவில் இடம் பெற்றார்? என இப்போது கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணி பதவி
பின்னர், ரஜினிகாந்த் சிவஞானம் ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியில் ட்ரெய்னராக நியமிக்கப்பட்டார். அவரிடம் தான் பயிற்சி பெற்று வருகிறார் பும்ரா. இதில் மற்றொரு முக்கிய விஷயம், பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஆவார்.
மிகச் சிறந்த ட்ரெய்னர்
எதிரணியை சேர்ந்தவர் என்றாலும் அதை எல்லாம் கடந்து தான் ரஜினிகாந்திடம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் பும்ரா. அதற்கு காரணம், அவர் தான் மிகச் சிறந்த ட்ரெய்னர் என்பதால் தான் என பிசிசிஐ வட்டார அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
பிசிசிஐ நிலை என்ன?
கங்குலி தலைமையிலான பிசிசிஐ அமைப்பை பொறுத்தவரை இந்த குளறுபடிகள் அனைத்துமே நிர்வாக கமிட்டி நிர்வகித்த போது நடந்தது. எனினும், அதன் தாக்கம் இப்போது வரை இருப்பதால், இனி தகுதி அடிப்படையில் மட்டுமே பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.