டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்பது சந்தேகம். காயமடைந்த அவர் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அணி, இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.
இந்த நிலையில், இந்த பயணத்தின்போது, ஜூன் 27ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்தார். அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடர், டி-20 போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகிவிடுவார் என, முதல் மூன்று போட்டிகளுக்கான அணியில் பும்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே விக்கெட் கீப்பர் விருத்தமன் சாகா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. பும்ரா, 2வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயத்தில் இருந்து அவர் இன்னும் தேறவில்லை. அதனால் பங்கேற்பது சந்தேகமே என்று கூறப்பட்டுள்ளது.