காயமடையாத ஒரு பௌலரை காட்டுங்க பார்ப்போம்.. பாகிஸ்தான் வீரருக்கு பதிலடி கொடுத்த பும்ரா
மும்பை : இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக மாறி உள்ள ஜஸ்ப்ரிட் பும்ரா தான் பந்துவீசும் முறை குறித்து வரும் கருத்துக்கள் பற்றியெல்லாம் கண்டுகொள்வதில்லை என கூறி உள்ளார்.
முன்னதாக பும்ரா ஓடி வந்து பந்து வீசும் முறை வித்தியாசமாக உள்ளதால், சில கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் அது குறித்து பேசி இருந்தனர்.
குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகிப் ஜாவேத் பும்ரா பந்து வீசும் முறையால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறி இருந்தார்.

என் கவனம் இங்கே தான்
இது பற்றி சமீபத்தில் பும்ராவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பும்ரா, "நான் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த மாட்டேன். நான் என் உடல் மீது கவனம் செலுத்துகிறேன். எப்படி உடற்தகுதியோடு இருப்பது என பார்க்கிறேன்" என்றார்.

காயமடையாமல் இருக்க முடியுமா?
மேலும், "கிரிக்கெட்டில் சரியான முறை என்ற ஒன்றே இல்லை. யாராவது ஒரு காயமடையாத பந்துவீச்சாளரை எனக்கு காட்டுங்கள். நான் என் உடற்தகுதி மீது தான் அதிக கவனம் செலுத்தி முன்னேற்றி வருகிறேன்" என கூறினார்.

பதிலடி கொடுத்த பும்ரா
பும்ராவின் பந்துவீச்சு தனித்துவமானது. அவர் ஓடி வந்து பந்துவீசுவது வித்தியாசமாக இருப்பதோடு, பும்ரா அதிக யார்க்கர் வீசுவதில் கில்லாடி. அதன் மூலம் ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தி விடுகிறார். இந்நிலையில், விமர்சனத்தை எல்லாம் நான் கவனிக்க மாட்டேன் எனக் கூறி பாகிஸ்தான் முன்னாள் வீரருக்கும், தன் பந்துவீச்சை விமர்சனம் செய்பவர்களுக்கும் நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார் பும்ரா.

ஓய்வில் பும்ரா
பும்ரா அடுத்து ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க உள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி ஓய்வு அளிக்கப்படுவதும் தான் நன்றாக செயல்பட உதவும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications