பிரிஸ்பேன்: இந்திய கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த டாஸ் முடிவு தவறானது என்பது பும்ரா பேசிய வீடியோ ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. இது விமர்சனத்தையும் எழுப்பி உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வாடிக்கையான ஒன்றாகும்.

ஆனால், ரோஹித் சர்மா டாஸ் வென்ற பின் பவுலிங்கை தேர்வு செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. காபா மைதானத்தின் முந்தைய போட்டி முடிவுகள் தான் அவர் இந்த முடிவை எடுக்கக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு முன் காபா மைதானத்தில் நடந்த ஐந்து போட்டிகளில் முதலில் பந்து வீசிய அணியே வெற்றி பெற்று உள்ளது.
அதன் காரணமாகவே ரோஹித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார் எனவும் தகவல்கள் வெளியானது. மேலும், இந்த போட்டியின் முதல் நாள் மழை பெய்யும் என்பதை அறிந்து, அந்த நேரத்தில் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் ரோஹித் இந்த முடிவை எடுத்தார். ஆனால், அவரது முடிவு தவறாக அமைந்தது.
இந்திய அணி மூன்றாவது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 13 ஓவர்கள் வீசிய நிலையில் பந்து பெரிதாக ஸ்விங் ஆகவில்லை. பந்தின் ஸீம் பிட்ச்சில் பெரிதாக வேலை செய்யவில்லை. இதை பும்ரா உறுதிப்படுத்திய காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.
போட்டி நடந்த போது ஐந்தாவது ஓவரை வீசிய பும்ரா பந்து ஸ்விங் ஆகவில்லை என்பதை அருகே நின்று இருந்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கூறினார். அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. பந்து ஸீம் ஆகவில்லை என்பதையும், எந்த இடத்தில் பிட்ச் செய்தாலும் ஸீம் வேலை செய்யவில்லை எனவும் பும்ரா கூறினார்.
இரண்டாவது நாள் அன்றும் பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த பிட்ச்சில் வேகம் மற்றும் பவுன்ஸ் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களின் ஆயுதமாக இருக்க முடியும் என்பதால் அதை இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் செயல்படுத்துவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் பவுன்ஸ் வீசுவதில் வித்தகர்கள் என்பதால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாகவும் இருக்கும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் ரோஹித் எடுத்த டாஸ் முடிவு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை.