அடிலெய்டு: ஆஸ்திரேலியாவின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித், பும்ராவின் பந்துவீச்சை தவறாக கணித்து ஆடி ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்த ஸ்மித் அதிருப்தியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக பும்ரா ஆதிக்கம் செலுத்தி வருவதும் வெட்ட வெளிச்சமானது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை விரைவாக பறிகொடுத்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து இருந்தது. இரண்டாவது நாளிலும் ஆஸ்திரேலிய அணியின் ரன் வேட்டை தொடர்ந்தது. இதற்கிடையே பும்ரா மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தார். அவர் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நாதன் மெக்ஸ்வீனி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
ஸ்டீவ் ஸ்மித் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். 41 வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் பந்தை லெக் திசையில் அடிக்க முயன்றார். ஆனால், பும்ரா சற்று அதிக பவுன்ஸுடன் வீசியதால் பந்து ஸ்டீவ் ஸ்மத்தின் பேட் மற்றும் கைப்பிடி அருகே உரசி சென்றது. அதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேட்ச் பிடித்தார்.
இதை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் 11 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் பும்ரா பந்தை நம்ப முடியாமல் சில வினாடிகள் உறைந்து நின்றார். பின்னர் தான் செய்த தவறை எண்ணி தன்னை தானே திட்டிக் கொண்டே களத்தை விட்டு வெளியேறினார்.
டெஸ்ட் போட்டிகளில் இதுவரை எட்டு முறை ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக பும்ரா பந்து வீசி இருக்கிறார். மொத்தம் அவருக்கு 133 பந்துகளை வீசி அதில் 58 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு முறை அவரின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் பும்ரா. உலகின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் பும்ரா பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறி கொடுப்பது தொடர்ந்து வருகிறது.
ஸ்மித் சென்ற பின் மார்னஸ் லாபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து அபாரமாக ரன் சேர்த்தனர். லாபுஷேன் அரைசதம் கடந்து 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.