பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தான் அணி கடந்த சில மாதங்களாக சுமாராக கிரிக்கெட் ஆடி வருகிறது. ஒரு சில வீரர்களை தவிர நிலையான அணியாக காட்சி அளிக்கவில்லை. மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளர் பதவிக்கு வந்த பின்னும் அணித் தேர்வு மோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
தொடர் குற்றச்சாட்டு
முன்னாள் வீரர்கள் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் ஆகியோரை குற்றம் சாட்டி வருகின்றனர். சரியாக செயல்படாத பாகிஸ்தான் வீரர்களையும் குறி வைத்து விளாசி வருகிறார்கள்.
அக்தர் விளாசல்
சமீபத்தில் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை விளாசி இருந்தார். இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிரிக்கெட் அமைப்பை முன்னாள் வீரர்கள் வழிநடத்தி வருவதாகவும், பாகிஸ்தானில் சில மேல்தட்டு மக்கள் அதை கைப்பற்றி, தங்களுக்கு கீழ்ப்படியும் நபர்களை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீர் குலைத்து வருவதாக கூறி இருந்தார்.
அஹ்மத் ஷாசாத் பேச்சு
இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் அஹ்மத் ஷாசாத் பேசிய பேச்சால் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் கோபம் அடைந்து, விளாசி இருக்கிறார். சரியான பார்மில் இல்லாத அஹ்மத் ஷாசாத் தன் உடற்தகுதியை மனத்தில் கொண்டு தன்னால் 12 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணிக்காக ஆட முடியும் என கூறினார்.
கடுப்பான ஜாவேத் மியான்தத்
அந்த வார்த்தைகளை கேட்ட ஜாவேத் மியான்தத் பொங்கி எழுந்துள்ளார். முதலில் செயல்பாட்டை காட்ட வேண்டும் என கூறி உள்ள அவர், பாகிஸ்தான் வீரர்களை மொத்தமாக காய்ச்சி எடுத்துள்ளார். இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகளை சுட்டிக் காட்டியும் இருக்கிறார்.
நச் கேள்வி
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்திய அணிகளின் வீரர்களுக்கு மாற்றாக ஒரு பாகிஸ்தான் வீரராவது இடம் பெற முடியுமா? என கேட்க விரும்புகிறேன். என நச் கேள்வியை முன் வைத்துள்ளார் ஜாவேத் மியான்தத்.
ரன் அடிச்சா தான் காசு
"இந்த உலகமே தினசரி ஊதியத்தின் அடிப்படையில் தான் இயங்கி வருகிறது. இன்று ரன் எடுங்கள். பணத்தை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். நாளையும் ரன் எடுங்கள். நாங்கள் நாளையும் பணம் கொடுப்போம். நீங்கள் வேலை செய்யாமல், ரன் குவிக்காமல் ஏன் பணத்தை வாங்கிக் கொள்கிறீர்கள். இதை உறுதி செய்ய வேண்டியது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தான். யாரும் கிரிக்கெட் அணியை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றார்.
20 வருஷம் கூட ஆடலாம்
அஹ்மத் ஷாசாத் 12 வருடத்திற்கு பாகிஸ்தான் அணிக்காக ஆடுவேன் எனக் கூறியதை சுட்டிக் காட்டி, "ஏன் 12 வருடம்? நீங்கள் 20 வருடங்கள் கூட ஆடலாம். அதை நான் உறுதி செய்கிறேன். ஆனால், நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நீங்கள் தினமும் செயல்பட்டால் உங்களை யாரும் அணியில் இருந்து நீக்க மாட்டார்கள்" என கூறினார்.
மற்ற நாடுகள் உதாரணம்
"இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தொடருக்கு, தொடர் தான் அணியை தேர்வு செய்கிறார்கள். கடந்த தொடரில் நீங்கள் 500 ரன்கள் எடுத்தால் கூட அவர்கள் அதை மறந்து விடுகிறார்கள். ஒரு சதம் அடித்த பின் பத்து இன்னிங்க்ஸ் வாய்ப்பு கிடைக்கும் ஒரே அணி பாகிஸ்தான் மட்டுமே. மக்கள் தொடர்ந்து தோல்வி அடைவது இங்கே பிரச்சனையே இல்லை" எனவும் விமர்சித்தார்.
இந்தியா செயல்பாடு
மேலும், "இந்திய அணியை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் 70, 80, 100, 200 என ரன் குவிக்கிறார்கள். அது தான் சிறந்த செயல்பாடு. ஆனால், உங்கள் (பாகிஸ்தான்) அணியில் இருந்து ஒருவர் கூட உலகின் சிறந்த அணியில் இடம் பெற முடியாது" என சாடினார் ஜாவேத் மியான்தத்.