அஹமதாபாத் : உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் இலவச குடிநீர் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிசிசிஐ வரலாற்றிலேயே இப்படி ஒரு பயத்தை யாரும் காட்டியதில்லை என்றே சொல்லலாம். அப்படி ஒரு பயத்தை தான் இந்திய ரசிகர்கள் காட்டி இருக்கிறார்கள்.

அதுவும் உலகக்கோப்பை தொடரின் முதல் நாளே பிசிசிஐ பயந்து போய் இலவச அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் உலகக்கோப்பை போட்டிக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் என கணக்கு போட்டது பிசிசிஐ.
அதற்காக இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி நடக்கும் என பிசிசிஐ அறிவித்து இருந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் என்ற அட்டவணை வெளியிட்ட போது தெரிய வந்தது.
அப்போதே பலருக்கும் இந்திய அணி ஏன் முதல் போட்டியில் ஆடவில்லை என்ற கேள்வி எழுந்தது. சரி, அது போனாலும் எப்படியும் இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டிக்கு கூட்டம் வந்துவிடும் என எதிர்பார்த்த நிலையில், முதல் நாளான இன்று மைதானம் வெறிச்சோடி இருக்கிறது.
எனினும், பிசிசிஐ சார்பில் 40,000 ரசிகர்கள் முதல் நாள் போட்டியைக் காண வந்துள்ளார்கள் என கூறப்பட்டு இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்கிறார்கள் மைதானத்தில் நேரில் போட்டியை கண்ட பத்திரிக்கையாளர்கள்.
மேலும், முதல் போட்டிக்கு சில மணி நேரம் முன்பே ரசிகர்கள் வரவில்லை என்பதை உணர்ந்த பிசிசிஐ யாரும் விமர்சிக்கும் முன்பே அதிரடியாக அனைத்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதும் அனைத்து ரசிகர்களுக்கும் இலவச மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. வெயில் காரணமாக ரசிகர்கள் மைதானம் வர தயங்குவதால் இந்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டு இருப்பதாக கூறப்பட்டாலும் அதில் கொஞ்சம் தான் உண்மை உள்ளது.
மேலும், இந்த அறிவிப்பு ஏன் உலகக்கோப்பை முதல் போட்டி துவங்க சில மணி நேரம் இருக்கும் போது வெளியாகிறது என பலரும் எண்ணிய நிலையில், அதற்கான விடை போட்டி துவங்கிய உடன் கிடைத்து விட்டது.
பிசிசிஐ பேராசையால் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றது பெரிய சிக்கல் ஆகி இருக்கிறது. பலரும் உலகக்கோப்பையை புறக்கணித்து இருக்கிறார்கள். ஆன்லைனில் விற்ற டிக்கெட்களை யார் வாங்கினார்கள் என்றே தெரியவில்லை.
உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பு டிக்கெட் விற்பனையை துவங்காமல் 45 நாட்களுக்கு முன்பு டிக்கெட் விற்றதும், போட்டி நடக்கும் இடத்துக்கு வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள் பயணத்துக்கான டிக்கெட் வாங்குவதிலும், ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்வதிலும் அதிக விலையேற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களை மைதானம் வர விடாமல் செய்து இருக்கிறது.
ஆகவே, இலவச வாட்டர் பாட்டில் அறிவிப்பின் காரணம் வெயில் மட்டுமே அல்ல.