மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக யாரும் ஐசிசி தலைவராக விண்ணப்பம் அளிக்காத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 35 வயது ஆகும் ஜெய் ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மிக இளம் வயதிலேயே ஐசிசி தலைவராகி சாதனை படைத்திருக்கிறார்.
மேலும், ஐசிசி தலைவர் பதிவியில் அமரும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்று இருக்கிறார். இதற்கு முன் இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் ஸ்ரீனிவாசன் மற்றும் ஷஷான்க் மனோகர் ஆகியோர் ஐசிசி தலைவராக இருந்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் கிரிக்கெட் அமைப்புகளில் பொறுப்பு வகித்து வந்த ஜெய் ஷா தாற்போது கிரிக்கெட்டின் உயரிய அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன் 2009 முதல் 2013 வரை அஹமதாபாத் மத்திய கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.
2013இல் குஜராத் மாநில கிரிக்கெட் அமைப்பின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெய் ஷா. 2015இல் பிசிசிஐ கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2019இல் குஜராத் மாநில கிரிக்கெட் அமைப்பின் இணை செயலாளர் பதவியில் இருந்து விலகினார். அடுத்த சில மாதங்களில் அவர் பிசிசிஐ செயலாளர் பொறுப்பை பெற்றார்.
2019 முதல் இப்போது வரை பிசிசிஐ செயலாளராக பணியாற்றி வந்தார் ஜெய் ஷா. இவரது காலத்தில் ஐபிஎல் தொடர் பல உச்சங்களை அடைந்தது. உலகிலேயே இரண்டாவது அதிக பணம் ஈட்டும் விளையாட்டுத் தொடராக ஐபிஎல் மாறியது. மேலும், இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. விராட் கோலி, ரோஹித் சர்மா என இரண்டு ஜாம்பவான்களை திறமையாக கையாண்டார்.
தற்போது ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஐசிசி தலைவராக இருந்த நியூசிலாந்தை சேர்ந்த கிரெக் பார்கிளே மூன்றாவது முறையாக தான் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ஜெய் ஷா ஐசிசி தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டார். அவருக்கு எதிராக வேறு யாரும் போட்டியிடாத நிலையில், அவர் ஐசிசி தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.