லண்டன்: பிசிசிஐ-யின் முன்னாள் செயலாளரும், சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் தற்போதைய தலைவருமான ஜெய் ஷா கிரிக்கெட் உலகின் எதிர்காலத்தை முடிவு செய்யும் முக்கிய அமைப்பான மேரில்போன் கிரிக்கெட் கிளப்-இன் சர்வதேச ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு மேரில்போன் கிரிக்கெட் கிளப் 120 உறுப்பினர்களை உள்ளடக்கிய வேர்ல்ட் கிரிக்கெட் கனக்ட்ஸ் ஃபோரம் என்ற அமைப்பை உருவாக்கி இருந்தது. அதற்கு முன் அதன் பெயர் உலக கிரிக்கெட் கமிட்டி என்பதாக இருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட குழுவில் 120 உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.

அவர்கள் அனைவரும் கிரிக்கெட்டில் முக்கிய நபர்களாக இருப்பவர்கள். அந்த ஆலோசனை குழுவில் தற்போது ஜெய் ஷா சேர்க்கப்பட்டு இருக்கிறார். முன்னாள் பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய அணி கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கும் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த நபராக பார்க்கப்படுகிறார் ஜெய் ஷா. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இளம் தலைவர் என்ற பெருமையும் அவர் பெற்று இருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனது 36 வது வயதில் அவர் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேரில்போன் கிரிக்கெட் கிளப்பின் உலக கிரிக்கெட் கமிட்டி தான் டிஆர்எஸ் ரிவ்யூ முறை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஆலோசனைகளாக வழங்கி இருந்தது. அந்த இரண்டும் தற்போது கிரிக்கெட்டில் அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய அமைப்பாக உள்ளது இது. ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பதால் அவரையும் இந்த ஆலோசனை குழுவில் சேர்த்ததன் மூலம் இந்த அமைப்பு முன்மொழியும் யோசனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியாக அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் ஜெய் ஷா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மாற்றத்தை கொண்டு வர முயற்சி எடுத்து இருந்தார். முக்கிய டெஸ்ட் அணிகள் அடங்கிய குழு ஒன்றையும், மற்ற அணிகளை மற்றொரு குழுவாகவும் பிரித்து இரண்டு நிலை கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது குறித்து அவர் கிரிக்கெட் அமைப்புகளிடம் பேசி இருந்தார்.