பிசிசிஐ தலைவராகும் ஜெய் ஷா.. அப்போ கங்குலியின் நிலைமை??.. புது தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி - விவரம்
மும்பை: இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ -ன் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வருகிறது.
6 ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் வாரிய பதவிகளில் இருக்கும், இவர்கள் இருவரும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை இருந்தது.

மீண்டும் போட்டி
ஆனால் சமீபத்தில் அதனை உச்சநீதிமன்றம் நீக்கியது. அதாவது பிசிசிஐ நிர்வாகத்திற்கான தேர்தலில் மீண்டும் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் போட்டியிடலாம் என்றும் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனையடுத்து மீண்டும் அவர்களே தான் பதவி வகிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திடீரென திருப்பம்
இந்நிலையில் திடீர் திருப்பமாக, ஜெய் ஷா தான் பிசிசிஐ தலைவராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய் ஷாவுக்கு ஆதரவாக இதுவரை 15 மாநில கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல கங்குலி இந்த பதவிக்கு போட்டியிடப்போவதே இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

கங்குலியின் நிலைமை
பிசிசிஐ போன்றே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் தேர்தல் வரவுள்ளது. அதாவது ஐசிசி தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் க்ரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பருடன் முடிவுக்கு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ள போதும், பிசிசிஐ உள்ளிட்ட சில வாரியங்கள் அதனை ஏற்கவில்லை. இதனால் தேர்தல் மூலம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

பிசிசிஐ-ன் முடிவு
அந்தவகையில் இந்தியாவில் இருந்து சவுரவ் கங்குலியை ஐசிசி தலைவராக நியமிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பிசிசிஐ-க்கு அதிக செல்வாக்கு உள்ளதால், மற்ற சில வாரியங்களும் கங்குலிக்கு ஆதரவு கொடுக்கும் எனத்தெரிகிறது. இதனால் ஐசிசி தலைவராக கங்குலி மற்றும் பிசிசிஐ தலைவராக ஜெய் ஷா ஆகியோர் தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications