மும்பை: சமீபத்தில் நிறைவடைந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, வங்கதேசம் இந்தியாவுக்கு வர மறுத்த விவகாரமும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகப் போவதாக மிரட்டியதும் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா முதன்முறையாக தனது மௌனத்தைக் கலைத்து அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
விருது விழா ஒன்றில் பேசிய ஜெய் ஷா, எந்த ஒரு பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், "ஐசிசியை விட எந்த நாடும் பெரியது அல்ல. ஒரு அணியை வைத்து மட்டும் ஒரு அமைப்பு இயங்காது; அனைத்து அணிகளின் கூட்டு முயற்சியால் தான் ஒரு அமைப்பு இயங்குகிறது. தொடக்கத்திற்கு முன்பே சில அணிகள் பங்கேற்குமா இல்லையா என்ற வதந்திகள் பரவின. ஆனால், இறுதியில் உலகக்கோப்பை மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதில் நான் பெருமை கொள்கிறேன்" என்றார்.

வங்கதேசம் இந்தியா வர மறுத்ததைத் தொடர்ந்து, ஐசிசி அந்த அணியைத் தொடரில் இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்தது. பின்னர் பாகிஸ்தான் அணி தொடரில் பங்கேற்க முன்வந்தது. ஐசிசி எடுத்த இந்த துணிச்சலான முடிவால் உலகக்கோப்பை தொடர் எவ்வித பாதிப்புமின்றி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த உலகக்கோப்பை தொடர் பார்வையாளர் எண்ணிக்கையில் முந்தைய சாதனைகளை முறியடித்ததாகத் தெரிவித்த அவர், "வரலாற்றிலேயே முதல்முறையாக 72 லட்சம் பேர் ஒரே நேரத்தில் நேரலையில் போட்டியைப் பார்த்துள்ளனர். அமெரிக்கா இந்தியாவைத் திணறடித்தது, நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தது, ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது என இந்தத் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சிறப்பாகச் செயல்பட்ட அனைத்து அணியினருக்கும் எனது பாராட்டுகள்" என்றார்.

மேலும், இந்திய அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், "உச்சத்தில் இருந்து கீழே விழுவதற்கு சில மாதங்களே போதும், ஆனால் கீழே இருந்து உச்சத்தை அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும். எனவே, கடின உழைப்பைத் தொடருங்கள். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதற்கேற்ப 2028, 2030, 2032, 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கும், உலகக்கோப்பை தொடர்களுக்கும் இப்போதிருந்தே திட்டமிட்டு தயாராகுங்கள்" என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்குத் தனது ஆலோசனையை வழங்கினார்.
