மும்பை : பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ஏற்கனவே, இரண்டு முறை அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த நிலையில் அவர் மூன்றாவது முறையும் அந்தப் பதவியை பெற மாட்டார் எனக் கூறப்பட்டது. அதற்கு பதிலாக பிசிசிஐ செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடும் என சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஷம்மி சில்வா, மூன்றாவது முறையும் ஜெய் ஷா தான் தலைவராக வர வேண்டும் என முன் மொழிந்தார். அதை அனைத்து உறுப்பினர் நாட்டின் அமைப்பை சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக வேண்டும் என்றால் பிசிசிஐ பதவி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பதவி ஆகியவற்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், அவர் தந்தை அமித் ஷா பாஜகவில் முக்கிய தலைவராக இருக்கும் நிலையில், ஜெய் ஷா இடையே அரசியலில் போட்டியிட வேண்டும் என நினைத்தாலோ, பதவிகள் பெறவோ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகள் அனுமதிக்காது. அதன் காரணமாக அவர் அந்த முடிவை கை விட்டு ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை தக்க வைக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் பதவி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி என இரண்டையும் தக்க வைத்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பணியாக இருப்பது ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரை நடத்துவது தான். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜெய் ஷா தலைமையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2022இல் டி20 போட்டிகள் வடிவில் ஆசிய கோப்பை தொடரை நடத்தியது. அடுத்து 2023இல் ஒருநாள் போட்டி வடிவில் ஆசிய கோப்பை தொடரை நடத்தியது.
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் தான் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது என்பதால் இலங்கையில் பெரும்பாலான போட்டிகளும், பாகிஸ்தானில் சில போட்டிகளும் நடத்தப்பட்டன. அதனால் ஜெய் ஷா மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அப்போது பல்வேறு புகார்களை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அப்போதும் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பிற முக்கிய ஆசிய அணிகளின் கிரிக்கெட் அமைப்புகள் ஜெய் ஷாவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது.