லண்டன்: இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. அமீரகத்தில் இத்தொடர் நடைபெறுவதால், கோப்பையை வெல்ல வங்கதேசம் முதற்கொண்டு ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கின்றன. இந்த நிலையில் தான் நேற்று உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா (wc), விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில், மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்குமே சர்பிரைஸ்.
இந்நிலையில், தோனியின் தேர்வு குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "உலகக் கோப்பை டி20 அணிக்கு தோனி ஆலோசகராக செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, துபாயில் நான் நேரடியாக இதுகுறித்து தோனியிடம் பேசினேன். பிசிசியின் கோரிக்கை குறித்து அவரிடம் எடுத்துரைத்தேன். முழுவதையும் கேட்ட தோனி, அணிக்கு ஆலோசகராக செயல்பட ஒப்புக் கொண்டார். இந்த முடிவை நான் மற்ற நிர்வாகிகளுடனும் பகிர்ந்து கொண்டேன். அனைவரும் இந்த முடிவை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். இறுதியாக, நான் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடமும் பேசினேன். அவர்களும் எங்களது முடிவுக்கு ஆர்வத்துடன் ஒப்புதல் தெரிவித்தனர். இப்படி அந்த அனைவருமே ஒரே அலைவரிசையில் இருந்ததால் தான் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது" என்று கூறியுள்ளார்.
முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மூன்று முறை அந்த அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, விவேகமும், வேகமும் கலந்த கேப்டன்ஷிப், சமயோஜித புத்தி, இக்கட்டான நேரத்தில் பொறுமையாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் என்று, இந்திய அணி சந்தித்த மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி.
கடந்த 2020ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் தான், இந்திய அணிக்காக மீண்டும் அவர் தனது பங்களிப்பை கொடுக்க தயாராகியுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட உள்ள தோனி, கேப்டன் விராட் கோலிக்கு நிச்சயம் பக்கபலமாக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. இவ்வளவு நாள் ஒரு வீரராக தோனியை பார்த்த ரசிகர்கள், இப்போது ஒரு ஆலோசகராக களத்திற்கு வெளியே நின்று கோலியை வழிநடத்தப் போவதை காண பேராவலுடன் உள்ளனர்.
அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.