மும்பை: கடந்த காலங்களில் உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி எப்படி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும், வெற்றிக்கு அடையாளமாகவும் திகழ்ந்ததோ, அதேபோல் தற்போதைய இந்திய அணியும் மாறியுள்ளது என ஐசிசி தலைவர் ஜெய் ஷா பேசி இருக்கிறார். சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய ஆண்கள் அணி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து நடைபெற்ற விருது விழா ஒன்றில் பேசிய ஜெய் ஷா, "ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா என்றால் வெற்றி என்று இருந்த நிலை மாறி, இன்று இந்திய அணி என்றால் வெற்றி என்று மாறியுள்ளது. இதுவே தற்போதைய நிதர்சனம்" என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

2019 முதல் இந்திய கிரிக்கெட்டில் தான் மேற்கொண்ட பணிகளின் மூலம் அடைந்த சாதனைகளை பட்டியலிட்ட அவர், "கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அணி 2 ஆண்கள் அண்டர் 19 உலகக்கோப்பைகள், 2 மகளிர் அண்டர் 19 உலகக்கோப்பைகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி, தொடர்ந்து 2 டி20 உலகக்கோப்பைகள் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என பல சாதனைகளை படைத்துள்ளது" என்று பெருமிதத்துடன் கூறினார்.
இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ஜெய் ஷா, "உச்சத்தில் இருந்து கீழே விழுவதற்கு சில மாதங்களே போதும், ஆனால் கீழே இருந்து உச்சத்தை அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும். நீங்கள் தற்போது அடைந்துள்ள இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது எளிதுதான். அதே ஆர்வத்துடனும் உழைப்புடனும் தொடர்ந்து விளையாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தான் பிசிசிஐ-யில் இருந்தபோது 2028 ஒலிம்பிக் தொடருக்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும் அதன் பின் ஐசிசி-க்கு சென்று விட்டதாகவும் கூறினார். தற்போது உள்ள பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 2028, 2030, 2032 மற்றும் 2036 ஆகிய ஆண்டுகளில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியை தயார் செய்ய வேண்டும் என ஜெய் ஷா கூறினார்.
