மும்பை: பிசிசிஐ தலைவராக தொடர்ந்து 2 முறை பொறுப்பில் இருந்து வந்த ஜெய் ஷா, தற்போது ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஐசிசி தலைவர்களில் பொறுப்பு வகித்து வந்தவர்களில் ஜெய் ஷா இளம் வயதிலேயே பொறுப்பேற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சூழலில் ஜெய் ஷா கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவராக அமித் ஷா இருந்த போது, ஜெய் ஷாவின் பயணம் தொடங்கியது. 2009ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளில் ஒருவராக ஜெய் ஷா பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். 4 ஆண்டுகள் குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு முக்கிய பணிகளை செய்து வந்த ஜெய் ஷா 2013ஆம் ஆண்டு இணை செயலாளராக பதவிக்கு கொண்டு வரப்பட்டார்.

அதன்பின் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த போது, குஜராத்தில் பிரம்மாண்ட மைதானம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்போது அகமதாபாத்தில் கட்டப்பட்டு வந்த நரேந்திர மோடி மைதானத்தின் கட்டுமானப் பணிகளில் ஜெய் ஷா முக்கிய பங்கு வகித்தார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டிலேயே பிசிசிஐ நிர்வாகத்திற்குள் ஜெய் ஷா களம் புகுந்தார் என்றே சொல்லலாம். ஏனென்றால் பிசிசிஐ நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவில் நிர்வாகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து 2019ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்த ஜெய் ஷா, நேரடியாக பிசிசிஐ செயலாளர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட்டார். அப்போதும் பிசிசிஐ செயலாளராக பொறுப்புக்கு வந்த இளைஞர் என்ற பெருமை ஜெய் ஷாவுக்கு கிடைத்தது. அப்போது சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்புக்கு வந்திருந்தார். தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷாவுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொறுப்பு என்பது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆசிய நாடுகளின் சார்பாக ஒருவர் தலைவர் பதவிக்கு வரலாம். அதன்படி ஜெய் ஷாவுக்கு அந்த பொறுப்பு அளிக்கப்பட்டது. பின்னர் 2022ஆம் ஆண்டு மீண்டும் பிசிசிஐ செயலாளராக பொறுப்பை தொடர்ந்த ஜெய் ஷா, உட்கட்டமைப்பு சார்ந்த பல்வேறு விஷயங்களை செய்து முடித்தார். அதேபோல் ஐபிஎல் தொடரின் தரத்தையும், அதன் பொருளாதாரத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார் என்று சொல்ல வேண்டும்.
இதனிடையே 2024ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொறுப்பு இலங்கை நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைசர் ஷம்மி சில்வா, ஜெய் ஷாவை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக அந்த பொறுப்பையும் 2வது முறையாக ஜெய் ஷா ஏற்று கொண்டார். அதேபோல் பிசிசிஐ செயலாளராக 2வது முறையாக பொறுப்புக்கு வந்து பெங்களூரில் மிகப்பெரிய தேசிய கிரிக்கெட் அகாடமிக்கான கட்டட பணிகளை முடித்துள்ளார். இன்னும் சில நாட்களில் அது திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது ஐசிசி தலைவராக பொறுப்புக்கு வந்துள்ளார். 2022ஆம் ஆண்டிலேயே ஐசிசியின் நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவின் நிர்வாகியாக ஜெய் ஷா இருந்தார். எப்படி பிசிசிஐ செயலாளராக வருவதற்கு முன் பிசிசிஐ-ன் நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் குழுவில் இருந்தாரோ, அதே பாணியில் ஐசிசி-யிலும் ஜெய் ஷா பொறுப்புக்கு வந்துள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த போது கிரிக்கெட்டை ஆசியப் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்பதில் ஜெய் ஷா தீவிரமாக இருந்தார்.
அதனை சாதித்தும் காட்டினார். தற்போது ஜெய் ஷா ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இந்த சூழலில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்புக்கு வந்திருப்பதால், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதில் ஜெய் ஷா முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.