பஞ்சாப்: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஃபினிஷர் ரோலில் ருத்ரதாண்டவம் ஆடிய ஜித்தேஷ் சர்மாவுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மிடில் ஆர்டரில் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் 309 ரன்களை ஐபிஎல் தொடரில் குவித்து அசத்தியவர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஏசியன் கேம்ஸ் போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏசியன் கேம்ஸ் போட்டி பற்றி ஜித்தேஷ் சர்மா பேசுகையில், இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுடன் பெருமிதத்துடன் ஒன்றாக நடக்கப் போகிறோம் என்ற உணர்வே பெருமையாக உள்ளது. எனக்கு தங்க மகன் நீரஜ் சோப்ராவை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விளையாட்டில் நீரஜ் சோப்ரா எனக்கு ரோல் மாடல். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அவரின் சாதனையை, அவ்வளவு எளிதாக யாராலும் முறியடித்துவிட முடியாது.
கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. நம்மை சுற்றி 10 பேர் எப்போதும் இருப்பார்கள். ரசிகர்களின் ஆதரவும் இருக்கும். ஆனால் தனி நபர் விளையாட்டு அப்படியானதல்ல. அங்கு நாம் அனைத்து முடிவுகளையும் தனியாக எடுக்க வேண்டும். விளையாட்டு கிராமத்தில் மற்ற விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவது, பேசுவது, உடற்பயிற்சி என்று அனைத்தும் ஒன்றாக செய்யப் போகிறோம்.
அவர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பதை பார்க்கவே ஆவலாக உள்ளது. நிச்சயம் எனக்கு ஏசியன் கேம்ஸ் வாழ்வை மாற்றும் அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் இதுபோன்ற அனுபவங்கள் கிரிக்கெட் தொடர்களில் கிடையாது என்று கூறியுள்ளார். அதேபோல், ஜித்தேஷ் சர்மா இதுவரை சொந்தமாக பயிற்சியாளர் இல்லாமல் யூ-டியூப் வீடியோ மூலம் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து பேசிய ஜித்தேஷ் சர்மா, சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர் அளவிற்கு நான் திறமைசாலி இல்லை. ஆனால் அவரின் வீடியோவை தொடர்ந்து பார்த்து, ஃபீல்ட் செட்டை எப்படி ஏமாற்றி சிக்சர் விளாசுகிறார் என்று கவனிக்கிறேன். சூர்யகுமார் பேட்டிங்கில் இருந்து சில நுணுக்கங்களை கற்று வருகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். நான் எனது ஆட்டத்தை 360 டிகிரியிலும் இருக்க வேண்டும் என்று பயிற்சி மேற்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.