தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 தொடரில் ஜோபக் சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை தழுவியது. பார்ல் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியுடன் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஜேஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டிவோன் கான்வே 7 ரன்களில் ஆட்டம் இழக்க, டுபிளசிஸ் 18 ரன்கள் சேர்த்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் டிபிளாய் 6 ரன்களிலும், மோயின் அலி 1 ரன்னிலும் ஆட்டம் இழக்க,ஜே எஸ் கே அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜானி பாரிஸ்டோ அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 60 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்சர்ள் அடங்கும்.
இறுதியில் டொனோவன் பெரேரியா 19 பந்துகளில் 32 ரன்கள் சேர்க்க, ஜே எஸ் கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கில் களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஜோ ரூட் 6 ரன்களின் ஆட்டம் இழக்க, நடு வரிசையில் விளையாடிய மிச்சல் 44 ரன்களும் டேவிட் மில்லர் 40 ரன்கள் எடுக்க தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் இரண்டு ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் 19 புள்ளி ஒரு ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து பார்ல் ராயல்ஸ் அணி வெற்றியை பெற்றது.இதன் மூலம் ஜே எஸ் கே அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் பார்ல் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 14 புள்ளிகளுடனும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் சன்ரைசஸ் ஈஸ்டன் கேப்டவுன் அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பிரிட்டோரியா கேபிட்டல் அணி 9 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது.