பகலிரவு டெஸ்ட் போட்டி
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை முறையே 112 மற்றும் 145 ரன்களுக்கு முடித்துள்ளன. தற்போது இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரூட்
முதல் இன்னிங்சில் இந்தியாவிற்கு எதிராக பௌலிங் செய்த கேப்டன் ஜோ ரூட் ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் உள்ளிட்ட முக்கிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜேக் லீச்சும் சிறப்பாக பந்து வீசிய நிலையில் இந்திய அணி 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.
5 விக்கெட்டுகள் சாதனை
முதல் இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்யாத ஜோ ரூட், பௌலிங்கிலும் தான் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். வெறுமனே 6.2 ஓவர்களில் 8 ரன்களை கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இதன்மூலம் ஆசியாவில் 5 விக்கெட்டுகள் சாதனையை மேற்கொண்ட முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
740 ரன்கள்... 8 விக்கெட்டுகள்
இந்த ஆண்டை மிகவும் சிறப்பாக துவக்கியுள்ளார் ஜோ ரூட். பேட்டிங்கில், பௌலிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் கலக்கி வருகிறார். இரண்டு இரட்டை சதம், ஒரு சதம் உள்ளிட்ட 740 ரன்களை இந்த ஆண்டில் அதற்குள்ளாக அவர் பூர்த்தி செய்துள்ளார். மேலும் ஒரு 5 விக்கெட் சாதனை உள்ளிட்ட 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.