
507 ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஏறக்குறை வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட இந்திய அணி, கடைசி நாளில் பெய்த மழை காரணமாக வெற்றிப் பெறும் வாய்ப்பை இழந்தது. ஆனால், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி,151 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றிப் பெற்றது. இதன் பிறகு, ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து. அதன் பிறகு எவ்வளவோ போராடியும், இந்திய அணியால் மீண்டு வர முடியவில்லை. முடிவில், இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தான் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (செப்.2) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் டாமினேட் செய்த ஒரே வீரர் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே. இதுவரை நடைபெற்றுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அடித்துள்ள ரன்கள் 64, 109, 180, 33, 121. மொத்தம் 507 ரன்கள். 3 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட.

தரவரிசையில் முதலிடம்
இந்திய பவுலர்கள் அவரை அவுட் செய்வதில் எந்த மெனெக்கெடலும் மேற்கொள்வதில்லை. அதற்கு பதில், மற்ற அனைத்து வீரர்களையும் டார்கெட் செய்து ஆல் அவுட் செய்து வருகின்றனர். ஏனெனில், அவரை அவுட் செய்ய முயற்சி எடுத்தால், மற்ற வீரர்களை அவுட் செய்யும் தீவிரம் குறைந்துவிடும். இது அணிக்கு தான் சிக்கல் என்பதே இந்திய அணியின் ஸ்டிராடஜி. அந்த அளவுக்கு அசைக்க முடியாத வீரராக கம்பீரமாக வலம் வருகிறார் ஜோ ரூட். இந்நிலையில், தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 6 வருடங்களுக்கு பிறகு, ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறார்.

ரோஹித் 5வது இடம்
கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளிய ஜோ ரூட், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 6 சதங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் ஜோ ரூட். அதில், இந்த இந்தியா சீரிஸிலும் மட்டும் 3 சதங்கள். இந்தத் தொடர் தொடங்கும் முன்பு 5ம் இடத்தில் இருந்த ரூட், மூன்றே போட்டிகளில் முதலிடம் பிடித்துவிட்டார். இதில், மற்றொரு முக்கியமான சங்கதி என்னவெனில், இத்தொடரில் நிலைத்தன்மையுடன் ஆடி வரும் ஒரே இந்திய பேட்ஸ்மேனான ரோஹித் ஷர்மா, 773 புள்ளிகளுடன் 5ம் இடம் பிடிக்க 766 புள்ளிகளுடன் கேப்டன் கோலி 6ம் இடத்துக்குச் சரிந்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதன் முதலாக ரோஹித் சர்மா டாப் 5 இடத்திற்குள் வந்திருக்கிறார். இது அவரின் மிகப்பெரிய சாதனை என்றால் மிகையல்ல. டி20 வீரர், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே லாயக்கு என்று விமர்சிக்கப்பட்ட ரோஹித், தனது அபார திறமையின் மூலம், டெஸ்ட்டிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். ரோஹித் இந்த தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் 230 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 124 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

பும்ரா முன்னேற்றம்
இதில், மற்றொரு பின்னடைவு என்னவெனில், இங்கிலாந்து தொடரில் சொதப்பி வரும் ரிஷப் பண்ட், தரவரிசையில் 8ம் இடத்திலிருந்து 12ம் இடத்துக்கு பின்தங்கியுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 916 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 891 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளனர். பிறகு, லபுஷேன் 878 புள்ளிகளுடனும், ரோஹித் சர்மா 773 புள்ளிகளுடனும், விராட் கோலி 766 புள்ளிகளுடனும், பாபர் அசம் 749 புள்ளிகளுடனும், டேவிட் வார்னர் 724 புள்ளிகளுடனும், குவிண்டன் டி காக் 717 புள்ளிகளுடனும், ஹென்றி நிகோல்ஸ் 714 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பவுலிங் தரவரிசையில் அஷ்வின் 2ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து தொடரில், 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications