
சரிசம போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஏறக்குறை வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட இந்திய அணி, கடைசி நாள் கொட்டித் தீர்த்த மழை காரணமாக அந்த நல்வாய்ப்பை இழந்தது. ஆனால், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், அதற்கு சேர்த்து வட்டியும் முதலுமாக வசூலித்துக் கொண்டது விராட் கோலி தலைமையிலான இந்திய படை. 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்தது இந்தியா. உண்மையில் சொல்ல வேண்டுமெனில், 2வது டெஸ்ட் போட்டியில், நான்காவது நாள் வரை இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் பும்ராவை டார்கெட் செய்வதற்கு முன்பு வரை, ஆட்டம் இங்கிலாந்து கண்ட்ரோலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அனைத்தும் மாறியது. பும்ரா - ஷமி இணை 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்தியா மீண்டு வந்தது. பிறகு, இங்கிலாந்தை 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றிப் பெற்றது. இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியை கிழித்து தொங்கவிட அனைத்துக்கும் அமைதியாகவே இருந்தனர் அந்நாட்டு வீரர்கள். இடையில் ஒருவாரம் ஓய்வு கிடைத்ததால், 2 நாட்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டனர்.

நிச்சயம் மாற்றம்
இதன் பிறகு, ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து. அந்த இடத்திலேயே போட்டியை இழந்துவிட்டது இந்தியா. அதன் பிறகு எவ்வளவோ போராடியும், இந்திய அணியால் மீண்டு வர முடியவில்லை. முடிவில், இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தான் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (செப்.2) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலர்களே காரணம்
இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி குறித்தும், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகள் குறித்தும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அதில், "மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நாங்கள் வென்றதற்கான முக்கிய காரணம் பவுலர்கள் தான். விராட் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். எனவே பந்துவீச்சு குழுவிற்கு தான் இந்த முழு பாராட்டும் போய் சேர வேண்டும். எங்கள் பவுலர்களால் தான், நாங்கள் விராட் கோலியை அமைதியாக வைத்திருக்க முடிந்தது. இது எங்கள் பந்துவீச்சு குழுவின் ஒரு மிகச் சிறந்த முயற்சியாகும். இந்தத் தொடரை வெல்ல வேண்டுமானால் நாங்கள் பின்தொடர வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், நாங்கள் கோலியை அவுட் செய்வதற்கான வழிகளை கண்டுபிடித்துள்ளோம். அவர் ஒரு சிறந்த வீரர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார். எப்போதும் சிறந்த வீரர்களை அவுட் செய்வதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும்

முன்னிலை பெறுவதே முக்கியம்
நிச்சயமாக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு உலகத்தரம் வாய்ந்த அணியாகும். அவர்களை குறைத்து எடைப்போட்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது. இப்போது தொடர் சமநிலை ஆகிவிட்டது. நாங்கள் இப்போது கடினமாக உழைக்க வேண்டும். கிடைக்கும் கேப்பில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட வேண்டும். இப்போது 2-1 என்று தொடரில் முன்னிலை பெறுவதே முக்கியம்.

ரூட் சவால்
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் என்று வலிமையாக இருந்தது. இது எங்கள் பவுலர்களின் அற்புதமான செயல்திறன். நல்ல டெம்ப்ளேட் என்று நாங்கள் நினைக்கிறோம். அதை அப்படியே அடுத்தடுத்த போட்டிகளுக்கும் சிறப்பாக கொண்டுச் செல்வது தான் சவால்மிக்க விஷயம். நாங்கள் மிகச் சிறப்பாக பந்து வீசியதாகவே நினைக்கிறோம். துல்லியமான லைன் அன்ட் லெந்த்தில் வீசினோம். அதை தொடர்ச்சியாகவும் எங்களால் செய்ய முடிந்தது.அதே பேட்டிங்கிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த டெஸ்ட் தொடரில், ஹெட்டிங்லேவில் தான் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தொடரில் நாங்கள் எப்படி கம்பேக் கொடுத்தோம் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இத்தொடரை 1-1 என்று மாற்ற நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். மீண்டும் எங்கள் உச்சபட்ச உழைப்பை கொடுத்து வெற்றிப்பாதையில் பயணிப்போம்" என்று ஜோ ரூட் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











