லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் 29 வயது வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவுக்கும், இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட்டுக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் குறித்து, தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜோ ரூட்டுடன் நடந்த கடுமையான வார்த்தை மோதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ள பிரசித் கிருஷ்ணா, ஜோ ரூட்டுக்கு எதிராக தான் எந்தவித தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், இங்கிலாந்து வீரர் ரூட் தான் எந்த காரணமும் இல்லாமல் கோபமடைந்து தன்னை திட்டியதாகவும் கூறினார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி போட்டியில், பிரசித் கிருஷ்ணாவும் ஜோ ரூட்டும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிக ரன்கள் குவித்தவரான ஜோ ரூட், தனது அமைதியான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்.

மைதானத்தில் அவர் அரிதாகவே கோபத்தை வெளிப்படுத்துவார். ஆனால், பிரசித் கிருஷ்ணாவுடனான இந்த மோதலில், இதுவரை காணப்படாத ஒரு ரூட்டை பார்க்க முடிந்தது. இந்த சம்பவம் இங்கிலாந்து இன்னிங்ஸின் 22வது ஓவரில், 2வது நாளில் தொடங்கியது. ஓவரின் 5வது பந்தில், பிரசித் கிருஷ்ணா ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு பந்தை வீசினார். அப்போது பிரசித், ரூட்டிடம் சில வார்த்தைகளைப் பேசியதாகத் தெரிகிறது.
இதற்கு பதிலளித்த ரூட், கோபமாக பதில் பேசினார். . இதனால், நடுவர் குமார் தர்மசேனா தலையிட்டு நிலைமையை சமாளித்தார். இது குறித்து பேசிய பிரசித் கிருஷ்ணா, "ரூட் ஏன் கோபமடைந்து திட்டினார் என்று எனக்கு தெரியவில்லை. நான், 'நீங்கள் சிறப்பான உடல்தகுதியுடன் இருக்கிறீர்கள்' என்று மட்டுமே சொன்னேன்."
"ஆனால், பதிலுக்கு அவர் திட்ட, அது வாக்குவாதமாகவும் மாறியது. நான் பின்னர் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு ரூட், 'நீங்கள் என்னை திட்டியதாக நினைத்தேன்' என்றார். நான், 'இல்லை' என்று பதிலளித்தேன். அதற்கு அவர், 'தம்மை உற்சாகப்படுத்தவும், ஆட்டத்தில் முழு ஈடுபாடு காட்டவும் இதை செய்தேன்' என்று ரூட் கூறினார்."
"இந்த விளையாட்டின் மீது எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். இப்படித்தான் நான் எப்போதும் விளையாடியிருக்கிறேன். குறிப்பாக ரூட் போன்ற ஒரு ஜாம்பவான், அணிக்காக முழுமையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி போராடுவதைப் பார்ப்பது, அனைவருக்கும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. நீங்கள் மைதானத்தில் போராடவும், போர்களை வெல்லவும் இருக்கிறீர்கள். சில நேரங்களில், திறமை மட்டுமல்ல, மன உறுதியும் இந்த பயணத்தில் முக்கியமானது," என்று பிரசித் கிருஷ்ணா கூறினார்.