மும்பை: இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் மற்றும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த விவாதத்தில் இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இருவரும் பங்கேற்று தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்களை விளாசியதன் மூலமாக, இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட் 50 சதங்களை எட்டிய 9வது வீரராக உருவாகியுள்ளார். இதனிடையே 33 வயதாகும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டாப் 7 இடங்களுக்குள் வந்திருக்கிறார். இன்னும் 2 போட்டிகள் விளையாடினாலே எளிதாக டாப் 5 இடங்களுக்குள் வர முடியும்.
33 வயதை மட்டுமே ஜோ ரூட் எட்டியிருப்பதால், அவரால் எளிதாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஃபேப் 4 என்று சொல்லப்படும் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஸ்டீச் ஸ்மித் ஆகிய 4 பேரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த விவாதம் குறித்து இந்திய சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆண்டுகளில் 17 சதங்களையும் விளாசி இருக்கிறார் ஜோ ரூட். தற்போதைய சூழலில் ஜோ ரூட் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணி நிர்வாகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதனால் முழு கவனமும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் மட்டுமே உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் இல்லாத போது கவுண்டி கிரிக்கெட்டை ஆடி வருகிறார். ஆனால் ஒரேயொரு வடிவத்தில் மட்டுமே ஜோ ரூட் விளையாடி வருவது அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆனால் விராட் கோலிக்கு அப்படியல்ல. டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரால் ஐபிஎல் தொடரை விளையாடாமல் இருக்க முடியாது. நிச்சயம் ரசிகர்கள் அவரை விடப் போவதில்லை.
விராட் கோலி 3 வடிவங்களிலும் விளையாட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை விராட் கோலி இன்ஜின் ரூம் என்பது ஒருநாள் கிரிக்கெட் தான். விராட் கோலி எப்போதெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுகிறாரோ, அப்போதெல்லாம் அவரின் பேட்டில் இருந்து ரன்கள் வந்து கொண்டே இருக்கும். இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்றால், நிச்சயம் இருவரும் ஒரே அளவில் தான் இருப்பதாக கூறியுள்ளார்.
அதேபோல் தினேஷ் கார்த்திக் பேசுகையில், ரன்கள், நம்பர்களை பார்க்கும் போது ஜோ ரூட் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று சிலருக்கு தெரியலாம். ஆனால் விராட் கோலியுடன் நெருங்கி விளையாடியவன் என்ற முறையில் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று மனதிற்கு தெரியும். பெரிய தொடர்கள், முக்கியமான போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார். சில நேரங்களில் விராட் கோலியை பார்த்து யாராவது கேள்வி எழுப்பினால்.. அந்த கேள்விக்கு பேட்டால் பதில் அளிப்பவர்.
அந்த கேள்வியை ஏன் கேட்டோம் என்று அந்த நபரே யோசிக்கும் அளவிற்கு விராட் கோலியின் ஆட்டம் இருக்கும். ஒருமுறை எனது வாழ்நாள் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும் என்றால், எந்த வீரரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான், விராட் கோலி என்று பதில் அளித்தேன். விராட் கோலி இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்களுடன் இருக்கிறார். அடுத்த 8 மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விராட் கோலி விளையாட இருப்பதால், நிச்சயம் ஜோ ரூட்டின் சாதனையை முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.