ரோகித், கோலி கிடையாது.. இந்த 34 வயது இந்திய வீரருக்கு தான் பந்துவீசுவது கடினம்- ஜோப்ரா ஆர்ச்சர்
லண்டன்: இங்கிலாந்து அணியின் முன்னணி அதிவேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் தொடரில் தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பேட்டர் கே.எல். ராகுல் தான் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் தன் ஆரம்ப கால ஆண்டுகளில் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்திறனின் உச்சத்தில் இருந்ததாகவும், மைதானத்தின் எந்தப் பகுதிக்கும் அவரால் பந்தை எளிதாக அடிக்க முடிந்ததாகவும் ஆர்ச்சர் பாராட்டியுள்ளார்.
உலக கிரிக்கெட்டின் மாபெரும் நட்சத்திரங்களான விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பல சிறந்த பேட்டர்களுக்கு ஆர்ச்சர் பந்துவீசியுள்ளார். இருப்பினும், ஐபிஎல் அரங்கில் தன்னை மிகவும் சோதித்த பேட்டராக அவர் கே.எல். ராகுலை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள ஆர்ச்சரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

"அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம்" - ஆர்ச்சர் புகழாரம்
கார்லோஸ் பிராத்வெயிட் உடனான 'தி சூப்பர் ஓவர் ஷோ' (The Super Over Show) நிகழ்ச்சியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் கலந்து கொண்டார். அப்போது, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீசுவதற்கு மிகவும் கடினமாக இருந்த பேட்டர் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காமல் கே.எல். ராகுலின் பெயரை ஆர்ச்சர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பேசிய ஆர்ச்சர் , "அநேகமாக ஐபிஎல் தொடரின் முதல் சில ஆண்டுகளில் விளையாடிய கே.எல். ராகுல் தான். அவர் அப்போது தனது ஆட்டத்திறனின் உச்சத்தில் இருந்தார். எந்தவொரு பந்தையும் மைதானத்தின் எந்தப் பகுதிக்கும் அவரால் அடிக்க முடியும் என்றே தோன்றியது. அவருக்கு பந்துவீசுவது உண்மையிலேயே எனக்கு மிகவும் கடினமாக இருந்தது" என்று கூறினார்.
ஆர்ச்சரின் இந்த வெளிப்படையான கருத்துக்கள், உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் மத்தியில் ராகுல் மீதான செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது. தனது நேர்த்தியான ஷாட்கள், சிறந்த டைமிங் மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடும் திறன் ஆகியவற்றால், கே.எல். ராகுல் டி20 கிரிக்கெட்டில் பல்துறை பேட்டராகத் திகழ்கிறார் என்பதை இந்த பாராட்டு மீண்டும் உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
