
சிறப்பான தொடக்கம்
இந்நிலையில், இன்று (ஆக.5) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்ததை விட இந்திய அணி மிகச் சிறப்பாக தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. தொடக்க வீரர்களான ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடினர். மிக நேர்த்தியாகவும் விளையாடினர். இடையில் 2 ரிவ்யூக்கள் இங்கிலாந்து எடுத்தாலும், அதனால் பலனில்லாமல் போனது.

ரோஹித் அவுட்
இதனால் ரோஹித் - ராகுல் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து வெற்றிகரமாக பயணித்தது. தொடர்ந்து அவ்வப்போது லூஸ் பந்துகளை இந்த ஜோடி பவுண்டரி விரட்டவும் தவறவில்லை. இதனால், ஸ்கோர் கணிசமாக உயர்ந்து கொண்ட வந்தது. மத்திய உணவுக்கு இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், ஓலே ராபின்சன் வீசிய புல் ஷாட்டில் தூக்கி அடித்த ரோஹித், 36 ரன்களில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் மூன்று ரன்கள் எடுத்திருந்தால் இந்த பார்ட்னர்ஷிப்பில் சதம் அடித்திருக்கலாம்.

பேக் டூ பேக் விக்கெட்ஸ்
ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் நிலைமை மோசமாகிவிட்டது. ஒன் டவுன் இறங்கிய புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் கோலி தான் சந்தித்த முதல் பந்திலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இவர்களை இருவரையும் பேக் டூ பேக் வீட்டுக்கு அனுப்பியது ஆண்டர்சன் தான். நிலைமை இப்படியிருக்க, இத்தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட முடியாத நிலை
முழங்கை காயம் காரணமாக, ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில், அவரது வலது முழங்கையில் ஸ்கேன் செய்த போது, காயம் மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனால், இந்த ஆண்டில் மீதமுள்ள அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 மற்றும் ஆஷஸ் தொடர் என அனைத்திலும் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசௌகரியம்
26 வயதான ஆர்ச்சர், தனது முழங்கை காயம் காரணமாக, கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்தார். சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் கிரிக்கெட் விளையாட திரும்பினார். ஆனால், பந்துவீசுகையில் அவர் கையில் அசௌகரியத்தை உணர, மீண்டும் சோதனை நடத்திய போது, காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்திருக்கிறது. இதனால், அவர் அடுத்தடுத்து பல முக்கிய கிரிக்கெட் தொடர்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications