ஆக்லாந்து: இட ஒதுக்கீடு நடைமுறையால் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆட வாய்ப்பு கிடைக்காமல் விரட்டிவிடப்பட்ட கிரான்ட் எலியட் இன்று, நியூசிலாந்து அணியின் ஹீரோவாக மாறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் உலக கோப்பை கனவை தனது பேட்டால் விரட்டியடித்துள்ளார்.
கிரான்ட் எலியட்... இந்த பெயர் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இருந்து இனிமேல் மறையப்போவதில்லை. அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து தடுமாறிய நேரத்தில் களம் கண்டு 73 பந்துகளில் 84 ரன்களை குவித்து, கடைசி ஓவரின் 5வது பந்தில், சிக்சர் அடித்து, வெற்றிக்கான ரன்னையும் பெற்றுக் கொடுத்து முதல் முறையாக நியூசிலாந்தை இறுதி போட்டிக்குள் அழைத்து சென்றவரை தலைமுறைகளும் வாழ்த்தப்போகின்றன.

ஆனால், இத்தனைக்கும் எலியட் ஒன்றும், நியூசிலாந்தின் மண்ணின் மைந்தன் கிடையாது. எந்த தென் ஆப்பிரிக்காவை அழ, அழ விரட்டினாரோ, அதே தென் ஆப்பிரிக்காவில் பிறந்து தவழ்ந்தவர்தான் இந்த எலியட்.
ஆம்.. 36 வயதான எலியட், தென் ஆப்பிரிக்காவிலிருந்து விடைபெற்று நியூசிலாந்தில் தஞ்சம் புகுந்தது 2001ம் ஆண்டில்தான். அதன்பிறகு நியூசிலாந்து அணியில் இடம் பிடித்து இன்று நாயகன் ஆகியுள்ளார்.

இவர் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற காரணம், திறமையிருந்தும், அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததுதான். ஏனெனில், தென் ஆப்பிரிக்காவில் 1998 முதல் கிரிக்கெட் அணி தேர்விலும் இட ஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. இனங்களின் அடிப்படையில் அங்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.
இட ஒதுக்கீடு நடைமுறையால் நன்மைகள் விளைந்ததை போல, இப்படி தீமைகளும் ஏற்படுகின்றன போலும்.