லண்டன் : ஒரு புறாவுக்கு போய் போரா, இது பெரும் அக்கப்போராக இருக்கிறது என்று வடிவேலு பேசிய 23ஆம் புலிகேசி வசனம் நம் அனைவருக்கும் நினைவு இருக்கலாம். ஆனால் இது வெறும் படம் தானே என்று நினைப்பவர்களுக்கு சற்றும் சளைக்காத வகையில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
ஆஷஸ் தொடர் எப்போதுமே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் மானப்பிரச்சையாகும். இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி வெற்றிக்காக போராடிய நிலையில் நட்சத்திர வீரர் பாரிஸ்டோ ஓவர் முடிவடைந்த நிலையில் கிரீசை விட்டு வெளியே வந்ததால் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ரன் அவுட் செய்யப்பட்டார். இது கிரிக்கெட்டின் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பிரிட்டன் அரசு வரை சென்று விட்டது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமரின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டி தற்போது இந்த விவகாரம் எந்த அளவிற்கு வெடித்து இருக்கிறது என்பதை காட்டுகிறது. செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆஸ்திரேலியாவின் அந்த ரன் அவுட் கிரிக்கெட் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நினைப்பதாக அந்த செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும் பென் ஸ்டோக்சின் கருத்துக்கு பிரதமர் ஒத்துப்போவதாகவும் இப்படி ரன் அவுட் செய்து தான் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை என்று அந்த செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் இன்னும் மூன்று டெஸ்ட்கள் எஞ்சி இருப்பதால் எங்களின் அணி மீண்டும் வரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தெரிவித்துள்ள கருத்து எங்களின் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். வெற்றிக்காக எப்போதும் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவார்கள். ஆஸ்திரேலியா அணியின் பின்னால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய மக்களும் இருக்கிறார்கள். கோப்பையுடன் எங்கள் வீரர்களை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேஷ் கூறியுள்ளார்.