திருநெல்வேலி: கவுசிக் காந்தி தனியாளாக விளையாடி, டிஎன்பிஎல் மூன்றாவது சீசனின் முதல் சதத்தை அடிக்க, ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியை வென்றது.
டிஎன்பிஎல் மூன்றாவது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. எஸ். தினேஷ் மற்றும் கவுசிக் காந்தி இணைந்து சிறப்பாக ரன்களை குவித்து வந்தனர். 22 ரன்கள் எடுத்த நிலையில் தினேஷ் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ஆனந்த் சுப்பிரமணியம் 37, ஆர். சதீஷ் 17 ரன்கள் எடுத்தனர். அவர் மூவரும் சேர்ந்து 80 ரன்கள் எடுத்த நிலையில், கவுசிக் காந்தி மிரட்டல் ஆட்டம் ஆடினார். எந்த பந்தாக இருந்தாலும விளாசினார். 68 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் அடிக்கப்படும் முதல் சதம் இதுவாகும்.
அடுத்து விளையாடிய விபி காஞ்சி வீரன்ஸ் அணியின் வீரர்கள், தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். விஷால் வைத்தியா மற்றும் சுப்பிரமணிய சிவா தலா 33 ரன்கள் எடுத்தனர். பாபா அபராஜித் 29 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுக்கு சுருண்டது.
2016 சாம்பியனான தூத்துக்குடி அணியின் அதிசயராஜ் டேவிட்சன், மலோலன் ரங்கராஜன், ஆகாஷ் சும்ரா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி வென்றது.