திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் லைகா கோவை கிங்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணி வென்றது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. அதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை 11 ரன்களில் வென்றது முன்னள் சாம்பியனான ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கவுசிக் காந்தி 43, எஸ். தினேஷ் 59 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
அக்ஷய் ஸ்ரீனிவாசன் 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கோவையின் டி.நடராஜன், அஜித் ராம், எம்.பி. ராஜேஷ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய கோவை, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷாருக் கான் 23, அபினவ் முகுந்த் 21 ரன்கள் எடுத்தனர். அதற்கடுத்து அந்தோனி தாஸ் 20, அகில் ஸ்ரீநாத் 35, ஆர். ரோஹித் 25 ரன்கள் எடுத்தனர். கிட்டத்தட்ட வெற்றி இலக்கை எட்டிய நிலையில், கோவை அணி அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
தூத்துக்குடியின் ஆகாஷ் சும்ரா, அதிசயராஜ் டேவிட்சன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் இந்த சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது தூத்துக்குடி.