
காப்பாற்றிய ஷர்துல்
இந்திய அணியில் முதலில் ரோஹித் ஷர்மா, க்றிஸ் வோக்ஸின் பவுன்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி 11 ரன்களில் வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சொதப்பிய ராகுல், இந்த போட்டியிலும் அதே மோடில் விளையாடினார். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். பிறகு துணை கேப்டன் 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நிர்கதியாய் நின்றது. எப்படியும் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிடுமே என்று எதிர்பார்த்த நிலையில், அற்புதமாக விளையாடினார் ஷர்துல் தாகூர். 36 பந்துகளை சந்தித்த ஷர்துல் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது. இல்லையெனில், இந்திய அணி வெறும் 130 ரன்களில் சுருண்டிருக்கும். இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

வெளியேறிய ஜோ ரூட்
இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பும்ராவின் ஓரே ஓவரில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் வெளியேறினார்கள். பர்ன்ஸ் 5 ரன்களில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாக, ஹஸீப் எட்ஜ் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பிறகு, 3வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், டேவிட் மலன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், இந்த தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி 21 ரன்களில் வெளியேறினார். அதுவும், முதல் நாள் ஆட்டம் முடியவிருந்த நேரத்தில், அவர் அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தாரை வார்த்த இந்தியா
இதில், இங்கிலாந்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கிரெய்க் ஓவர்டன் விக்கெட்டையும், டேவிட் மலன் விக்கெட்டையும் அடுத்தடுத்து இழந்தது. அதாவது, 62 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. யோசித்து பாருங்கள். எத்தனை அருமையான வாய்ப்பு இது என்று. கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், இங்கிலாந்தை 120 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்திருக்கலாம். ஆனால், அந்த இடத்தில் தான் இந்திய அணி கோட்டை விட்டது. ஆறாவது விக்கெட்டுக்கு ஜானி பேர்ஸ்டோ - ஓலே போப் ஜோடி, ஆட்டத்தை இந்தியாவின் கைகளில் இருந்து பறித்துச் சென்றது. எவ்வளவோ போராடியும், இந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய பவுலர்களால் பிரிக்கவே முடியவில்லை. 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்களை சேர்த்தது. அணி ஸ்கோர் 151-ஆக இருந்த போது தான் பேர்ஸ்டோ அவுட்டானார். இந்த 6வது விக்கெட்டில் தான், இந்திய அணி தங்களுக்கு கிடைத்த தங்க வாய்ப்பை தாரை வார்த்துள்ளது.

எப்பேர்ப்பட்ட வாய்ப்பு அது!
இப்போது, மொயீன் அலி தன் பங்குக்கு 35 ரன்கள் அடித்துச் செல்ல, இங்கிலாந்து 2ம் நாள் தேநீர் இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. ஓலே போப் 74 ரன்களுடனும், க்றிஸ் வோக்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். போட்டியில், இந்தியா தோற்றுவிடும் என்று சொல்லவில்லை.. அல்லது இங்கிலாந்து நிச்சயம் வென்றுவிடும் என்றும் சொல்லவில்லை. ஆனால், யோசித்துப் பாருங்கள்.. 62-5 விக்கெட்டுகள். எப்பேர்ப்பட்ட வாய்ப்பு அது! அதைத் தான்.. அந்த வாய்ப்பைத் தான் இந்தியா இழந்திருக்கிறது. இனி, இந்தியா 2வது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தாக வேண்டும். அப்போதுதான், வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications