சௌதாம்ப்டன் : இங்கிலாந்தில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கிறது. இந்த போட்டியின் வெற்றி தோல்வி தொடரைக் கைப்பற்ற மிகவும் முக்கியம் என்பதால், இரண்டு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக திட்டமிட்டு வருகின்றன.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்களும், இந்தியா 273 ரன்களும் எடுத்தன. இந்தியாவின் புஜாரா சதம் அடித்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆடி வரும் இங்கிலாந்து, தற்போது 233 முன்னிலை பெற்று, 8 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.
நாங்கள் நிச்சயம் வெல்வோம் :
சாம் கர்ரன் களத்தில் நிற்பதால் மேலும் ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியா 250 முதல் 300 வரையிலான இலக்கை எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் இருக்கிறது. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார். இங்கிலாந்து 233 ரன்கள் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்கக்கது.
ஜோஸ் பட்லர் சொல்லும் காரணம் :
அதற்கு ஜோஸ் பட்லர் சொல்லும் காரணம் இதுதான். முதல் இன்னிங்க்ஸில் இருந்தே ஆடுகளத்தில் உள்ள சிறிய சிதைவுகள் பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கிறது. அது சுழல் பந்துவீச்சாளர்களான மொயீன் அலி மற்றும் அதில் ரஷித்துக்கு பெரிதும் உதவும். வேகப் பந்து வீச்சாளர்களும் இந்த ஆடுகளத்தில் பவுன்சர் வீச முடியும். எனவே, இப்போது நங்கள் அடித்துள்ள ரன்களே வெற்றி பெற போதுமானது என தன் காரணத்தை கூறியுள்ளார் பட்லர். மொயீன் அலி முதல் இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை காப்பாற்றிய பட்லர் :
பட்லர் இங்கிலாந்தின் இரண்டாம் இன்னிங்க்ஸில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தடுமாறி வந்த நிலையில் 69 ரன்கள் அடித்து சற்றே இங்கிலாந்தை நிமிரச் செய்தார். அதன் பலனாகவே, தற்போது இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 233 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது இங்கிலாந்து.