
டி20 உலகக் கோப்பை
நேற்று ஷார்ஜியாவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ராய் மற்றும் பட்லர் களமிறங்கினர். இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2ஆவது ஓவரிலேயே ஹசரங்கா பந்துவீச்சில் ராய் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மாலன் 6 ரன்களில் சமீரா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

அதிரடி ஆட்டம்
அடுத்துக் களமிறங்கிய அதிரடி வீரர் பேர்ஸ்டோ வந்த வேகத்தில் ஹசரங்கா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு புறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும்கூட மறுபுறம் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தார். இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ளவே திணறிக் கொண்டிருந்த போதிலும், ஜோஸ் பட்லர் மட்டும் எதோ வேறு ஒரு பிட்சில் ஆடுவது போல இலங்கை பந்துவீச்சாளர்களைத் தும்சம் செய்தார். அவருடன் இங்கிலாந்து கேப்டன் மார்கன் கை கோர்க்கவே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இங்கிலாந்து அணி
இந்த ஜோடியை பிரிக்க இலங்கை எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. கடைசியில் 19ஆவது ஓவரில் ஹசரங்கா தான் இந்த ஜோடியையும் பிரித்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மோர்கன் 36 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்த போது. ஹசரங்கா பந்துவீச்சில் போல்ட் ஆனார். 19ஆவர் ஓவர் முடிவில் பட்லர் 87 ரன்களுடனும் மொயின் அலி ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை சமீரா வீசினார்.

கடைசி பந்தில் சிக்ஸர்
புல் டாஸாக வந்த முதல் பந்தை பைன் லெக் பகுதியில் பவுண்டரிக்கு விளாசினார் பட்லர். 2ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார், அடுத்து ஷாட் பிட்ச்சாக வீசப்பட்ட 3ஆவது பந்து எட்ஜ் ஆகி டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக்கில் விழுந்தது. இருப்பினும், இலங்கை வீரர்களால் அதை கேட்ச் செய்ய முடியவில்லை, அடுத்த டாட் பால்களாக போனது. கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் சதம் அடிப்பார் என்ற நிலையில் அந்த பந்தை சிக்ஸருக்கு அட்டகாசமாகப் பறக்க விட்டார்.

பல்வேறு சாதனை
இதன் மூலம் 2021 டி20 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை ஜோஸ் பட்லர் பெற்றார். வெறும் 67 பந்துகளில் அவர் இந்த அற்புத சாதனையைப் படைத்துள்ளார். 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என 3 ஃபார்மேட்களிலும் சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். முதல் 50 ரன்களை அடிக்க 45 பந்துகள் எடுத்துக் கொண்ட அவர், அடுத்த 50 ரன்களை வெறும் 21 பந்துகளில் குவித்தார்.

இலங்கை தோல்வி
அடுத்துக் களமிறங்கிய இலங்கை அணி முதல் ஓவரிலேயே நிஸ்ஸங்க விக்கெட்டை இழந்தது. பவர் ப்ளே முடிவதற்குள்ளேயே குசல் பெரேரா, சரித் அசலங்க என மொத்தம் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கடைசியில் 19 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே எடுத்து இலங்கை ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

டி20 உலகக் கோப்பை
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது.என்றே கூறலாம். விளையாடிய 4 போட்டிகளிலும் வென்றுள்ள இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து தனது அடுத்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வரும் நவ, 6ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதேநேரம் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்றுள்ள இலங்கைக்கு அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்துவிட்டது. இலங்கை அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நவ.4ஆம் தேதி எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications