
விலகும் யோசனை
இந்நிலையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லருக்கு பதிலாக நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸை அணியில் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் இதே காரணத்திற்காக இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும், ஆஷஸ் தொடரில் இருந்து விலகும் யோசனையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.

தியாகம் செய்துவிட்டோம்
இதுகுறித்து பேசிய பட்லர், வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் எனது குடும்பம் எனக்கு ரொம்பவே முக்கியமானது. அவர்களைத் தாண்டி என்னால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாட எனக்கு மிகவும் பிடிக்கும். இருந்தாலும், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக எனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். ஏனெனில் எனது கிரிக்கெட் வாழ்விற்காக எனது மனைவியும், குடும்பமும் இழக்காதது ஏதுமில்லை. நான் கிரிக்கெட்டுக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறேன், என் மனைவியும் குடும்பமும் நிறைய தியாகம் செய்திருக்கிறார்கள். அதனால் இத்தருணத்தில் நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் சந்தேகம்
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான பயோ-பபுள் கட்டுப்பாடுகள் குறித்த கவலைகள் காரணமாக ஆஷஸ் தொடரைத் தவிர்ப்பது குறித்து யோசிப்பதாகவும் கூறியுள்ளார். ஆஷஸ் தொடர் டிசம்பர் மற்றும் ஜனவரி 2021-22ல் நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும். ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் பயோ-பபுள் மிகவும் கடுமையாக உள்ளது. இதனால், அவர் ஆஷஸ் தொடரில் பங்கேற்பது கடினம் என்றே கூறப்படுகிறது.

அதிர்வலை
சமீப காலமாக விளையாட்டு வீரர்கள் தீவிர மன அழுத்தத்தில் சிக்கி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதை காண முடிகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் மட்டும் இரண்டு பேர் மன அழுத்தம் காரணமாக வெளிப்படையாக பேசி போட்டியில் இருந்து விலகியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், இதே போன்று, தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், ஆகையால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாகவும் தடாலடியாக அறிவித்திருந்தார். அதேபோல், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக, கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவர்கள் அனைவருக்கும் முன்பாகவே, 2 மாதங்களுக்கு முன்பு ஜப்பானின் நவோமி ஒசாகா இதே போன்று மன அழுத்த பிரச்சனை காரணமாக டென்னிஸ் தொடரில் இருந்து பாதியில் விலகி பரபரப்பை ஏற்படுத்தினார். சிமோன் பைல்ஸ், பென் ஸ்டோக்ஸ் என்று நீண்ட லிஸ்ட் இங்கிலாந்தை சேர்ந்த நீச்சல் வீரர் ஆடம் பீட்டி வரை சென்றது.

உடனடி தீர்வு
ஓய்வில்லாத உழைப்பு, வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம், தன் மீதுள்ள அதிகபட்ச எதிர்பார்ப்பு என அனைத்தும் வீரர், வீராங்கனைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள். மிக விரைவில் இதற்கான தீர்வுகளை அந்தந்த நாடுகளும், விளையாட்டுச் சங்கங்களும் எடுக்கவில்லை எனில், எதிர்காலத்திலும் இதுபோன்று பலர் மன அழுத்தங்களில் சிக்கித் தவிப்பதை தவிர்க்க முடியாது என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் தான் மன அழுத்தம் என்பதை வெளிப்படையாக சொல்லாமல், நானும், என் குடும்பமும் கிரிக்கெட்டுக்காக நிறைய தியாகங்களை செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











