லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லர், கடந்த 2019 உலக கோப்பை இறுதிப்போட்டியின்போது பயன்படுத்திய ஜெர்சியை ஏலத்திற்கு விட்டு நிதி திரட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக இந்த ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், அந்த ஜெர்சி தற்போது ரூ.60 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

கடந்த 2019ல் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ல் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா தோல்வியுற்று வெளியேறியது. அதுமுதல் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச போட்டிகளை தவிர்த்து வருகிறார். தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வியுற்றது.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. விளையாட்டுத்துறையும் முடங்கியுள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அனைவரும் இந்த நெருக்கடி சூழலில் அதிகளவில் நன்கொடை அளித்து வருகின்றனர்.
ரோஜர் பெடரர் உள்ளிட்ட வீரர்கள் அதிகளவில் நன்கொடை அளித்துள்ளனர். இதேபோல இந்தியாவிலும் அதிகமான அளவில் வீரர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதனிடையே இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர், 2019 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தான் உபயோகித்த தன்னுடைய ஜெர்சியை ஏலத்தில் விட்டு, அதன் தொகையை கொரோனா பாதிப்பிற்கு நிவாரணமாக அளித்துள்ளார்.
இந்த போட்டியின்போது இந்த ஜெர்சியை அணிந்து விளையாடிய பட்லர், எதிரணி வீரர் மார்ட்டின் குப்டில்லின் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் அரைசதத்தை குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அந்த ஜெர்சியில் அணியின் வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் ஜெர்சியை தான் ஏலம் விடப்போவது குறித்த அறிவிப்பை பட்லர் வெளியிட்டார். அந்த ஜெர்சியை வாங்க 82 பேர் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அது 60 லட்சத்திற்கு ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
இந்த தொகையை லண்டனில் உள்ள ராயல் பிராம்ப்டன் மற்றும் ஹேர்பீல்ட் மருத்துவமனைகளுக்கு கொரோனா குறித்த உபகரணங்கள் வாங்குவதற்காக நன்கொடையாக அளிக்கவுள்ளதாக பட்லர் கூறியுள்ளார்.
அந்த ஜெர்சி தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று கூறியுள்ள பட்லர், ஆனால் இந்த நெருக்கடியான நேரத்தில் அது சமூக நலனுக்காக பயன்பட்டுள்ளது தனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.