ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 கிரிக்கெட் தொடரில், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான சூப்பர் ஓவர் வெற்றியைத் தொடர்ந்து, ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வியூகத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். கடைசி பந்தில் கிடைத்த ரன்-அவுட் வாய்ப்பிற்கு தோனியின் பழைய உத்திதான் காரணம் என்று அவர் பேசி இருப்பது தோனி ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ஜோகன்னஸ்பர்க் மற்றும் டர்பன் அணிகளுக்கு இடையிலான போட்டி உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. 206 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டர்பன் அணிக்கு, கடைசிப் பந்தில் வெற்றி பெற 1 ரன் தேவைப்பட்டது. அப்போது ஜோகன்னஸ்பர்க் அணியின் பந்துவீச்சாளர் வியான் முல்டர் பந்துவீசத் தயாராக இருந்தார்.

அந்த இக்கட்டான நேரத்தில், முல்டரிடம் சென்று பேசிய கேப்டன் டு பிளசிஸ் ஒரு ஆலோசனையை வழங்கினார். அதன்படி முல்டர் பந்தை வீச, பேட்ஸ்மேன் அதைத் தவறவிட்டார். மறுமுனையில் இருந்த விக்கெட் கீப்பர் டோனோவன் ஃபெர்ரைரா தோனியைப் போலவே ஒரு கையுறையைக் கழற்றிவிட்டுத் தயாராக இருந்தார். பந்தைப் பிடித்த அவர் மின்னல் வேகத்தில் ரன்-அவுட் செய்ய, ஆட்டம் 'டை' (Tie) ஆனது. பின்னர் சூப்பர் ஓவரில் ஜோகன்னஸ்பர்க் அணி திரில் வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பின் இந்தத் திட்டம் குறித்துப் பேசிய டு பிளசிஸ், "எனக்கு 2016 டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டி நினைவுக்கு வந்தது. அந்தப் போட்டியில் கடைசி பந்தில் தோனி விக்கெட் கீப்பராக நின்று செய்த ரன்-அவுட் அற்புதமானது. அப்போது பந்துவீச்சாளர் கட்டர் பந்தை வைடாக வீசியிருப்பார்.
அதே உத்தியைத்தான் நான் முல்டரிடமும் சொன்னேன். 'பந்தை ஸ்டம்பிற்கு நேராக வீசாமல், சற்று விலக்கி ஷார்ட்டாக வீசு' என்று கூறினேன். நாங்கள் விக்கெட்டை எதிர்பார்க்கவில்லை, ஆனால் ரன்-அவுட் மூலம் ஆட்டத்தைத் தக்கவைக்க நினைத்தோம். அது கச்சிதமாக வேலை செய்தது" என்று கூறினார்.
டு பிளசிஸ் குறிப்பிட்டது, 2016 டி20 உலகக்கோப்பையில் பெங்களூருவில் நடந்த இந்தியா - வங்கதேசம் போட்டியைத் தான். அன்று ஹர்திக் பாண்டியா வீசிய கடைசிப் பந்தில், தோனி ஒரு கையுறையைக் கழற்றிவிட்டு ஓடிவந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானை ரன்-அவுட் செய்து இந்தியாவை வெற்றி பெறச் செய்திருப்பார். அதே பாணியில் தற்போது ஜோகன்னஸ்பர்க் கீப்பர் ஃபெர்ரைராவும் செயல்பட்டு அணியை சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்றார்.
முதலில் பேட்டிங் செய்த ஜோகன்னஸ்பர்க் 205 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய டர்பன் அணியும் 205 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்றதன் மூலம், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேப்டன் டு பிளசிஸ் மற்றும் கீப்பர் ஃபெர்ரைரா ஆகியோரின் சாதுர்யமான செயல்பாடே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.