சென்னை: சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில், பெல்ஜியம் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் அடையாளமான '16'ம் நம்பர் ஜெர்சியை அணிந்து களமிறங்கிய இளம் வீரர் பிரின்ஸ்தீப் சிங், ஷூட்-அவுட்டில் அபாரமாகச் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
வெள்ளிக்கிழமை இரவு சென்னை எழும்பூர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டம் கடைசி நிமிடம் வரை ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைப்பதாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய 13-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணி முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனால் முதல் பாதியில் இந்தியா 0-1 என பின்தங்கியிருந்தது.

ஆனால், இரண்டாவது பாதியில் இந்திய ஜூனியர் சிங்கங்கள் சிலிர்த்து எழுந்தன. 45-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ரோஹித் ஒரு அற்புதமான கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
அடுத்த 3 நிமிடங்களில் (48-வது நிமிடம்) சாரதா நந்த் திவாரி பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. மைதானமே அதிர்ந்தது.
வெற்றியின் விளிம்பில் இந்தியா இருந்தபோது, ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்த நிலையில் (59-வது நிமிடம்) பெல்ஜியம் அணி கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்கப் போட்டி பெனால்டி ஷூட்-அவுட் முறைக்குச் சென்றது.
இங்குதான் இளம் கோல்கீப்பர் பிரின்ஸ்தீப் சிங் ஹீரோவாக மாறினார். ஸ்ரீஜேஷின் 16-ம் நம்பர் ஜெர்சியை அணிந்திருந்த அவர், ஸ்ரீஜேஷைப் போலவே பதற்றமில்லாமல் செயல்பட்டார். பெல்ஜியம் வீரர்களின் முயற்சிகளைத் துல்லியமாகக் கணித்துத் தடுத்தார்.
இந்தியத் தரப்பில் சாரதா நந்த் திவாரி மற்றும் அங்கித் பால் ஆகியோர் கோல் அடிக்க, இறுதியில் இந்தியா ஷூட்-அவுட்டில் 4-3 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதையும் பிரின்ஸ்தீப் தட்டிச் சென்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய பிரின்ஸ்தீப், "நான் ஸ்ரீஜேஷ் அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரைப் பார்க்கும்போதே எனக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இது ஒரு அற்புதமான போட்டி, சென்னை ரசிகர்களின் ஆதரவு நம்பமுடியாத அளவிற்கு இருந்தது" என்று நெகிழ்ந்தார்.
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கைமாறுவது போல, ஸ்ரீஜேஷின் மாணவன் அதே ஜெர்சியில் இந்தியாவைக் காப்பாற்றியது ரசிகர்களை நெகிழ வைத்தது.
காலிறுதியில் வென்ற இந்திய அணி, வரும் டிசம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், 7 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை எதிர்கொள்ளவுள்ளது. பிரின்ஸ்தீப் சிங்கின் இந்த ஃபார்ம், அரையிறுதியிலும் இந்தியாவுக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.