மும்பை: மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவராக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகா ஆர்யாமான் சிந்தியா கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் 2ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், ஜெய் ஷா பாணியில் தனது மகனை ஜோதிராதித்ய சிந்தியா களமிறக்க இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் கிரிக்கெட்டும், அரசியலும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்த ஒன்றாகும். கிரிக்கெட் வீரர்கள் பெரியளவில் அரசியல்வாதிகளாக மாறுவதில்லை என்றாலும், கிரிக்கெட் சங்கங்களை பிடிக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். தற்போது மத்திய அமைச்சராக உள்ள அமித்ஷா கூட ஒரு காலத்தில் குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தவர் தான்.

மும்பை மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக செயல்பட காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்படும். தற்போது கூட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா தான் ஐசிசி தலைவராக செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்பாக பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா பணியாற்றினார்.
தமிழக கிரிக்கெட் சங்கத்தை வழிநடத்துவதும் கூட முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தான். அந்த வகையில் அடுத்ததாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவராக பாஜக முக்கியத் தலைவரின் மகன் களமிறக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது மகன் மகா ஆர்யாமான் சிந்தியாவை முன்னிறுத்தி இருக்கிறார்.
இவர் ஏற்கனவே குவாலியர் கிரிக்கெட் சங்க துணைத் தலைவராக இருந்து வருகிறார். அப்படி இருந்தவாறே மத்தியப் பிரதேச லீக் தொடரை 2 சீசன்கள் நடத்திவிட்டார். மத்தியப் பிரதேச பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கைலாஷ் விஜய்வர்கியா இடையில் மோதல் இருந்தாலும், போட்டியில் மகா ஆர்யமான் சிந்தியாவின் கைகளே ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவராக மாதவராவ் சிந்தியா செயல்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா செயல்பட்டார். தற்போது 3வது தலைமுறை வாரிசான மகா ஆர்யமான் சிந்தியா களமிறக்கப்பட்டுள்ளார். இம்முறை மகா ஆர்யமான் சிந்தியாவை போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.