நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜேக்ஸ் கல்லிஸ் அபாரமாக ஆடி சதம் போட்டார். அதேபோல அம்லாவும் சதமடித்தார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் இன்று நாக்பூரில் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித் மற்றும் பிரின்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்மித் 6 ரன்கள் எடுத்த நிலையிலும், பிரின்ஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும், ஜாகிர் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது.
இருப்பினும் பின்னர் இணைந்த அமலாவும், கல்லிஸும் நிலைத்து நின்று விட்டனர். இருவரும் அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தனர்.
இருவரும் ஆளுக்கு ஒரு சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவின் நிலையை ஸ்திரப்படுத்தியுள்ளனர்.
கல்லிஸ் முதலில் சதம் போட்டார். 146 ரன்களுடன் அவர் ஆடிக் கொண்டிருக்கிறார். சற்று முன்பு சதம் போட்ட அமலாவும், 102 ரன்களுடன் ஆடி வருகிறார்.
தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்துள்ளது.