கொழும்பு: இலங்கை அணியின் புதிய கிரிக்கெட் நட்சத்திரமாக உருவெடுத்து இருக்கும் கமிந்து மென்டிஸ் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை வென்று சாதனை படைத்து இருக்கிறார். இதுவரை சுப்மன் கில் மட்டுமே செய்த இந்த சாதனையை கமிந்து மென்டிஸ் நிகழ்த்தி இருக்கிறார்.
கமிந்து மென்டிஸ் டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தை பிடிப்பார் என சொல்லும் அளவுக்கு தான் ஆடிய முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி தற்போது 91.27 என்பதாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்து ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்றார்.

தற்போது 2024 செப்டம்பர் மாதத்திற்கான விருதையும் வென்று இருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து டான் பிராட்மேனுக்கு நிகரான சாதனையை செய்து இருப்பதால் அவருக்கு தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்த விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர் தான் ஆடிய முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் 50 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்து இருக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடி இருந்தார். அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் இரண்டு சதங்களை அடித்து இருந்தார். அப்போது அதிவேகமாக முதல் ஆயிரம் டெஸ்ட் ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் சாதனையை செய்து இருந்தார். டெஸ்ட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் இந்த சாதனையை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இதை அடுத்து அவருக்கு செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை அளித்து இருக்கிறது ஐசிசி. இந்த விருதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையும் செய்திருக்கிறார் கமிந்து மென்டிஸ். இதற்கு முன் சுப்மன் கில் 2023 ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். அவர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். தற்போது கமிந்து மென்டிஸ் இரண்டாவதாக அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.