லாகூர்: வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி இழந்ததையடுத்து, அந்த அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். டாக்காவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாபர் அசாம் மற்றும் ஃபகார் ஜமான் ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில், இளம் வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறினர். சல்மான் அலி அகா சதம் விளாசிய போதிலும், கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாஹீன் அப்ரிடியால் அதனை அடிக்க முடியாமல் போனது தோல்விக்கு வித்திட்டது.

இந்த படுதோல்வி குறித்து பேசிய கம்ரான் அக்மல், "கடவுளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். நாம் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டோம் என்பதை பாருங்கள். நெதர்லாந்து அணி கூட பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் ஆடினால், நம்மை வீழ்த்தி டெஸ்ட் அந்தஸ்தை எளிதாக பெற்றுவிடலாம் என நினைக்கும். அந்த அளவுக்கு கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கி விட்டீர்கள்."
"பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஏன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தீர்கள்? வங்கதேச அணி 350 ரன்கள் குவித்திருக்கும். லிட்டன் தாஸ் மெதுவாக ஆடியதால் தான் 290 ரன்களுக்குள் சுருண்டனர். இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாத நிலையில், ஐசிசி கோப்பையை என்ன திருடியா கொண்டு வரப்போகிறீர்கள்." என கடுமையாக விமர்சித்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடரை இழப்பதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணி 2026 டி20 உலகக்கோப்பையிலும் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது. லீக் சுற்றில் இந்தியாவிடமும், சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடமும் தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. கடைசி போட்டியில் இலங்கையை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில், வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 4 ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு கூட செல்லாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
