சிட்னி : ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு தொண்டை தொற்று காரணமாக கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று அஞ்சப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு அந்த பாதிப்பு இல்லை என்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒருநாள் தொடரில் பங்கேற்க ரிச்சர்ட்சன் சிட்னிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிய கேன் ரிச்சர்ட்சன்னுக்கு தொண்டை தொற்று இருந்ததால் அவருக்க கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை 3 போட்டிகளிலும் வென்று ஒயிட்வாஷ் செய்துள்ளது. இதையடுத்து தற்போது தன்னுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் சர்வதேச ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் தொடரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, யாருமற்ற மைதானத்தில் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி நடைபெற்றது.
இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு தொண்டையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவில்லை.
ரிச்சர்ட்சன்னுக்கு சாதாரண சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதனிடையே ரிச்சர்ட்சன்னுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு COVID-19 பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ரிச்சர்ட்சன் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் அறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த முடிவை அடுத்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் பங்கேற்பதற்காக சிட்னி புறப்பட்டு சென்றார். இதனால் அவருக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியினருக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.