கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன், சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். இவரது இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த திடீர் அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது ஓய்வு குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (NZC) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், வில்லியம்சன், "இந்த முடிவு எனக்கும் அணிக்கும் சரியான நேரம். நீண்ட காலமாக நான் விரும்பிய இந்த பயணத்தில், பல நினைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த முடிவு, அணிக்கு முன்னோக்கிச் செல்ல ஒரு தெளிவைக் கொடுக்கும், குறிப்பாக அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இது உதவும்" என்று கூறியுள்ளார்.

35 வயதான வில்லியம்சன், கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அன்று முதல் நியூசிலாந்து அணியின் முக்கியத் தூணாக விளங்கி வந்த அவர், தனது நேர்த்தியான ஆட்டத்தாலும், அமைதியான தலைமைப் பண்பாலும் அனைவரையும் கவர்ந்தார். இதுவரை 75 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார்.
அவரது தலைமையின் கீழ், நியூசிலாந்து அணி 2016 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறியது. மேலும், 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்ற பெருமை வில்லியம்சனுக்கு உண்டு. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து தோல்வியைத் தழுவியது.
டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், வில்லியம்சன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 33 என்ற சராசரியுடன் 2575 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 18 அரை சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 95 ஆகும்.
அணியின் எதிர்காலம் குறித்து அவர் குறிப்பிடுகையில், "நியூசிலாந்து அணியில் திறமையான டி20 வீரர்கள் பலர் உள்ளனர். வரவிருக்கும் காலம், அவர்களுக்கு வாய்ப்பளித்து உலகக் கோப்பைக்கு அவர்களைத் தயார்படுத்துவதற்கு முக்கியமானதாக இருக்கும். மிட்செல் சான்ட்னர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் தலைவர். இந்த வடிவத்தில் பிளாக் கேப்ஸ் அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நேரம் இது. நான் தூரத்திலிருந்து அவர்களுக்கு ஆதரவளிப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தயாராக இருப்பதாக வில்லியம்சன் கூறியுள்ளார். தற்போது அவரது உடனடி கவனம், வருகின்ற டிசம்பர் மாதம் 2ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தயாராவதே ஆகும்.
மேலும், உலகெங்கிலும் உள்ள உள்ளூர் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 சீசனுக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.