கெமர் ரோச்சின் தந்தை மறைவு... கட்டித்தழுவி ஆறுதல் கூறிய நியூசிலாந்து கேப்டன்.. நெகிழ்ச்சி சம்பவம்
ஹாமில்டன் : மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர் கெமர் ரோச்சின் தந்தை சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து ஹாமில்டனில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் துவக்கத்தில் அவரை கட்டித்தழுவி நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஆறுதல் கூறினார்.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்ட நிலையில் டி20 தொடரை நியூசலாந்து வென்றுள்ளது.

டி20 தொடரை வென்ற நியூசிலாந்து
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்கள் திட்டமிடப்பட்ட நிலையில் டி20 தொடரை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகள் இன்று ஹாமில்டனில் துவங்கியுள்ளன.

ஆறுதல் கூறிய கேப்டன்
போட்டி துவங்குவதற்கு முன்னதாக சமீபத்தில் தனது தந்தை ஆன்ட்ரூ ஸ்மித்தை இழந்துள்ள மேற்கிந்திய தீவுகள் வீரர் கெமர் ரோச்சை கட்டித்தழுவி நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்த புகைப்படத்தை இஎஸ்பிஎன் கிரிக் இன்போ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வீரர்கள் அஞ்சலி
மேலும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நியூசிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருதரப்பு வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு நிற பேண்ட்களை அணிந்திருந்தனர். மேலும் அவரது மறைவிற்கு கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் போர்டும் அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளது.

சாதாரண விஷயமல்ல
கெமர் ரோச் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த சம்பவத்திலிருந்து கூடிய விரைவில் வெளிவர இறைவனை பிரார்த்திப்பதாக டீம் மேனேஜர் ரால் லெவிஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் மனதிற்கு நெருக்கமானவர்களை இழப்பது சாதாரண விஷயமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications